லக்னோ: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளதால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதன் மூலமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆடிய 6 போட்டிகளில் 6யிலும் வென்று அசத்தியுள்ளது. அதேபோல் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி சுற்றில் ஒரு காலினை வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து இலங்கை, நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் போட்டிகள் இருப்பதால், முதல் இரு இடங்களில் இந்திய அணி நிறைவு செய்ய வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை 5வது தோல்வியை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது. இங்கிருந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ரன் ரேட் அடிப்படையில் பார்த்தால் கூட, இங்கிலாந்து அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் விரைவில் மானம் ஏறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரையிறுதிக்கான ரேஸில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.