ஐதராபாத்: ஐதராபாத் பிட்ச் முதல் நாளிலேயே ஸ்பின்னாகினால் அது இங்கிலாந்து அணிக்கு சாதகம் தான் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பலரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. இங்கிலாந்து அணியின் பேஸ் பால் அணுகுமுறையை இந்திய அணி வீழ்த்தி காட்டுமா என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் 2012ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணி முனைப்புடன் உள்ளது.

இந்த டெஸ்ட் தொடரின் எதிர்வினை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் அதிகளவு எதிரொலிக்கும். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் பேசுகையில், முதல் நாளில் இருந்தே பந்து ஸ்பின்னாகினால் நிச்சயம் அது மிகப்பெரிய தவறாக முடியும்.
ஏனென்றால் இங்கிலாந்து ஜாக் லீச் உள்ளிட்ட ஸ்பின்னர்களை இங்கிலாந்து அணி தேர்வு செய்திருக்கிறது. ஆனால் ஜடேஜாவை விடவும் ஜாக் லீச் சிறந்த ஸ்பின்னரா என்ற கேட்டால், நிச்சயம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதல் நாளிலேயே டர்னிங் பிட்சை கொண்டு வந்து, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில், ஜாக் லீச் அபாயரகமான வீரராக இருப்பார்.
அதேபோல் அதிகளவு ஸ்பின்னாகும் போது, இந்திய அணியின் பேட்ஸ்மேன்களையும் வீழ்த்த முடியும். ஆனால் ஒருவேளை பிளாட் பிட்சாக இருந்து இந்திய அணி முதல் பேட்டிங் ஆடினால், அவர்களின் பவுலர்கள் இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்திவிடுவார்கள். இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாடும் என்பதை இந்திய அணி அறிந்து வைத்திருக்கும்.
அதுதான் இங்கிலாந்து அணியின் புதிய பாணியாக உள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இங்கிலாந்து அணியின் அதிரடியை பார்த்துள்ளனர். அதனால் பழைய எண்ணங்களுடன் இந்திய அணி வந்தால், நிச்சயம் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். அதேபோல் ஒரே பாணியில் விளையாடி இந்தியாவில் டெஸ்ட் தொடரை யாராலும் வெல்ல முடியாது.
ஏனென்றால் ஒரு பாணியில் ஆடி எந்த அணியும் தொடர்ந்து வெற்றிகளை பெற்றதில்லை. பெப் கார்டியாலோ தனது ஸ்டைலை மான்செஸ்டர் சிட்டி அணிக்குள் புகுத்தி, அவர்களின் ஃபார்மேஷனை மாற்றினார். அதன் காரணமாக தான் மான்செஸ்டர் சிட்டி அணியால் அடுத்தடுத்து வெற்றிகளை பெற முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.