மும்பை : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடப் போகும் அணிகள் எது என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நாளை தொடங்கவுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இதுவரை நடந்துள்ள 13 உலகக்கோப்பை தொடர், 8 டி20 உலகக்கோப்பை தொடர்களில் டாப் 8 அணிகள் மட்டுமே அரையிறுதி போட்டிகளில் மீண்டும் மீண்டும் விளையாடி இருக்கின்றன. 2003ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் மட்டுமே கென்யா அணி அரையிறுதி சுற்று வரை முன்னேறியது. அப்போதும் கூட நியூசிலாந்து அணி கென்யாவுடன் விளையாட மறுத்ததால் ஏற்பட்ட சம்பவமாகும்.

அதன்பின் எந்த கத்துக்குட்டி அணியும் உலகக்கோப்பை அல்லது டி20 உலகக்கோப்பை அரையிறுதி வரை முன்னேறியதில்லை. இந்த சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி தங்களின் எழுச்சியால் படைத்துள்ளது. இந்த நிலையில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேபோல் 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இந்தியா - இங்கிலாந்து அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த முறை அரையிறுதி போட்டியில் விளையாடிய போது இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. அதுமட்டுமல்லாமல் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
ஆனால் இம்முறை இந்திய அணி வலுவான அணியாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் மனநிலையில் மாற்றமடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு கடுமையான சவால் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள அணிகள் குறித்த கணிப்பை இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.
அதன்படி தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது அரையிறுதியில் இந்திய அணியும் வெல்லும் என்று கணித்துள்ளார். ஆசிய அணிகள் இரண்டும் இறுதிப்போட்டியில் மோதும் என்று ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.