"நாங்க நாலு பேரு".. இந்திய பேட்டிங்கை காலி செய்த 4 வீரர்கள்.. கோலி, ஸ்ரேயாஸ் உதவியால் டீசன்ட் ஸ்கோர்
கார்டிஃப்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் சிவம் துபே ஆகிய 4 வீரர்களின் மோசமான பேட்டிங்கால் இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சொதப்பியுள்ளது. விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் போராடி உருவாக்கிய நல்ல அடித்தளத்தை இந்த 4 பேரும் தங்களது அடுத்தடுத்த விக்கெட்டுகளால் அடியோடு காலி செய்தனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில் 31 ரன்களும், ரோஹித் சர்மா 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்தது. வழக்கம் போல நேர்த்தியாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்து 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் 66 ரன்கள் எடுத்து இறுதிவரை போராடினார்.
ஆனால், இவர்களின் உழைப்பை இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடியோடு வீணடித்தனர். இஷான் கிஷன் 1 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 2 ரன்னிலும், அக்சர் படேல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிலும் சிவம் துபே வந்த வேகத்திலேயே முதல் பந்தில் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இதனால் 178 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவாக இருந்த இந்தியா, அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 233 ரன்களுக்குச் சுருண்டது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஒருவனாகப் போராடி 66 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா 13 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் அதிரடியாக 20 ரன்கள் குவித்ததால், இந்திய அணி ஓரளவிற்கு கௌரவமான ஸ்கோரான 233 ரன்களை எட்டியது. இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications
