2026 டி20 உலககோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணியின் பேட்டிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பொல்லாக் கடுமையாக விமர்சித்துள்ளார். மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று இரவு இந்தப் போட்டி நடைபெறுகிறது.இந்த சூழலில், இந்திய பேட்டிங் சிறப்பான நிலையில் இல்லை என்றும், சில வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியும் நம்பிக்கையளிக்கவில்லை என்று பொல்லாக் கூறியுள்ளார்
இது குறித்து ஐசிசி-க்கு அளித்த பேட்டியில் பொல்லாக், "இந்தியாவின் பேட்டிங் அதன் சிறப்பான நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சிலர் ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக அவர்கள் கூறினாலும், நேர்மையாகச் சொல்லப்போனால், எனக்கு அது போதுமான நம்பிக்கையை அளிக்கவில்லை. ஆனால், இங்கிலாந்து பேட்டிங் வரிசையை பார்த்தாலும், இதைத்தான் நீங்கள் சொல்வீர்கள்" என்று கூறினார்.

இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா இன்னும் சோபிக்கவில்லை. இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் ரன்கள் குவித்தாலும், அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.மேலும், இந்தப் போட்டியின் வெற்றியாளர் பந்துவீச்சில்தான் தீர்மானிக்கப்படுவார் என பொல்லாக் வலியுறுத்தினார். வான்கடே பிட்ச் இந்திய அணிக்குச் சாதகமாக இருக்கும் என்றும், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் பிற இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், இங்கு சவால் அதிகம் என்றார் அவர்.

இது குறித்து பேசிய அவர், "என்னை பொறுத்தவரை பந்துவீச்சுதான் தீர்மானிக்கும். வன்கடே மைதானத்தில் இங்கிலாந்தை விட இந்திய அணிக்கு அதிக சாதகமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ரஷித், டாசன், வில் ஜாக்ஸ் ஆகியோர் கொல்கத்தா, கொழும்பில் சிறப்பாக செயல்பட்டனர். வன்கடேவில் அவர்களால் அதேபோல செயல்பட முடியுமா? இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதில் அடிவாங்கலாம்" என்றார்.
டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இரு அணிகளும் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோதுகின்றன. 2022-ல் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2024-ல் இந்திய அணி வென்று சமன் செய்தது.அரையிறுதிக்கு முன்னதாக, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை ஷான் பொல்லாக் வெல்லும் அணியாகவும் அவர் கணித்தார். இங்கிலாந்து சூப்பர் 8-ல் சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு வந்தாலும், வான்கடேவில் இந்தியாவுக்கே வெற்றி சாத்தியம் என்றார் அவர்.

"இந்தியாதான் வெற்றி பெற வாய்ப்புள்ள அணியாக களமிறங்கும் என்று சொல்வேன். ஆனால் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றில் சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு வந்துள்ளது. ஒரு அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால், இந்த நிலையில் நான் இந்தியாவையே ஆதரிப்பேன்" என்று தெரிவித்தார்.இரு அணிகளும் ஐந்து அரையிறுதிகளில் தலா மூன்று வெற்றிகளுடன் சமன் செய்துள்ளன. எனினும், வான்கடேவில் இந்தியாவுக்கு வலுவான சாதனை உள்ளது. இந்த மைதானத்தில் விளையாடிய ஏழு டி20 போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளது.