மும்பை: டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா ஏழு பந்துகள் எதிர்கொண்டு வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்த சூழலில் இரண்டாவது விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் இசான் கிஷன் ஆகியோர் அதிரடி காட்டி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

26 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரை சதம் கடக்க மறுமுனையில் இசான் கிஷன் 4 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 18 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதில் எட்டு பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடங்கும்.

இதேபோன்று நான்காவது வீரராக களமிறங்கிய சிவம் துபேவும் சிக்ஸர்களை பறக்க விட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமார் யாதவ் 11 ரன்களில் ஆட்டம் இழக்க சிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா தன் பங்கிற்கு மூன்று சிக்சர் அடிக்க 7 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.
ஹர்திக் பாண்டியாவும், கடைசி கட்டத்தில் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய பில் சால்ட், ஐந்து ரன்களிலும், கேப்டன் ஹாரி புரூக் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
பெரும் எதிர்பார்க்கப்பட்ட ஜாஸ் பட்லர் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். இங்கிலாந்து அணி தடுமாற நடுவரிசையில் விளையாடிய ஜேக்கப் போத்தல், தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி இங்கிலாந்து ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்தார். 19 பந்துகளில் அரை சதம் அடித்த ஜாக் போத்தேல், ஐந்து சிக்சர், மூன்று பவுண்டரி அடித்து தொடர்ந்து அதிரடி காட்டினார்.

மறுபுறம் டிம் பேண்டன் ஐந்து பந்துகளில் 17 ரன்களும், வில் ஜாக்ஸ் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணிக்கு கடைசி நான்கு ஓவரில் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஜாக் போத்தேல் பதில் கடைசி வரை நின்று இந்தியாவுக்கு டென்ஷன் அளித்தார். சிறப்பாக விளையாடிய போத்தேல் 45 பந்துகளில் சதம் விளாசினார். போட்டியின் 18வது ஓவரில் பும்ரா 6 ரன்களும், 19வது ஓவரில் ஹர்திக் 1 விக்கெட் உடன் 9 ரன்களை விட்டு கொடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது.
சிவம் துபே கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் போத்தேல் ரன் அவுட் ஆக, இங்கிலாந்தின் வாய்ப்பு முடிந்தது. இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி இங்கிலாந்தை 246 ரன்களில் கட்டுப்படுத்தினர். இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு இந்திய அணி 4வது முறையாக தகுதி பெற்று இருக்கிறது. இதன் முலம் வரும் மார்ச் 8ஆம் தேதி ஞாயிற்றுகிழமை இந்திய அணி, நியூசிலாந்தை பைனலில் எதிர்கொள்கிறது.