சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நடுவர் கொடுத்த எச்சரிக்கையால் இந்திய அணி பெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தனர். கொல்கத்தாவில் இருந்தது போல் பனிப்பொழிவு பெரிய அளவு இல்லை. மேலும் இங்கிலாந்து வீரர்கள் வேகப்பந்துவீச்சை எந்த ஒரு சிக்கலும் இன்றி எதிர் கொண்டார்கள்.

இதன் காரணமாக கேப்டன் சூரியகுமார் இன்றைய ஆட்டத்தில் ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். இந்த நிலையில் ஆட்டத்தில் 18வது ஓவர் தொடக்கத்தின் போது நடுவர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு வார்னிங் கொடுத்தார். அதாவது டி20 கிரிக்கெட்டை விறுவிறுப்பாக நேரம் விரயம் இல்லாமல் நடத்துவதற்காக ஸ்டாப் க்ளாக் என்ற ஒரு விதியை ஐசிசி கொண்டு வந்தது.
அதன்படி ஒரு ஓவருக்கும் மற்றொரு ஓவருக்கும் இடையில் 60 வினாடிகள் மட்டும்தான் ஃபீல்டிங் செய்யும் அணி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி இரண்டு முறைமேல் பந்து வீசும் அணி 60 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால், ஐந்து ரன்கள் அபராதம் விதிக்கப்படும். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு முறை ஒரு ஓவருக்கும் மற்றொரு ஓவருக்கும் இடையே 60 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டது.
இந்த சூழலில் 3வது முறை 60 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என ஹர்திக் பாண்டியாவுக்கு நடுவர் வார்னிங் அளித்தார். இதனை அடுத்து இந்திய அணி சுதாரித்துக் கொண்டு விரைவாக பந்து வீச தொடங்கியது. ஒருவேளை இந்திய அணி 18 வது ஓவரை தொடங்க 60 வினாடிக்கு மேல் எடுத்திருந்தால் ஐந்து ரன்கள் கூடுதலாக அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும்.
இதனால் நடுவர் கொடுத்த வார்னிங்கால் இந்திய அணி தப்பித்தது. சுழற் பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போது ஃபில்டிங் செட் செய்ய சூரிய குமார் அதிக நேரம் எடுத்துக்கொண்டது இந்த சூழலுக்கு ஒரு காரணமாக இருந்தது.எனினும் இந்திய அணி ஸ்டாப் கிளாக் விதியில் இருந்து தப்பித்தது. ஏற்கனவே 2024 டி20 உலக கோப்பையின் போது ஸ்டாப் கிளாக் விதியால் அமெரிக்காவுக்கு எதிராக இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.