லக்னோ: உலகக்கோப்பை தொடரின் மிகச்சிறந்த பவுலிங் அட்டாக்கை இந்திய அணி கொண்டுள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், சூழல் இந்திய அணிக்கு சாதகமாக இல்லாத போது அனைத்து அனுபவ வீரர்களும் சரியான நேரத்தில் முன் நிற்கிறார்கள். முதல் 5 ஆட்டங்களில் நாங்கள் சேஸிங் செய்து வெற்றிபெற்றோம். ஆனால் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ளோம். நிச்சயம் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்துவீசியது. எங்களுக்கு சவாலாக அமைந்தது. ஆனால் எங்களை பொறுத்தவரை, இந்த பிட்சில் சவால் அளிக்க தேவையான ஒரு ஸ்கோரை சேர்க்க வேண்டும் என்பது தான் திட்டமாக இருந்தது.
இன்றைய ஆட்டத்தில் எங்களின் பேட்டிங் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை. ஏனென்றால் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது சாதாரண சூழல் இல்லை. அதுபோன்ற சூழல்களில், பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. அதனை எங்களால் அமைக்க முடிந்தாலும், சரியாக முடிக்க முடியவில்லை. நான் உட்பட சில வீரர்கள் சொதப்பிவிட்டோம். எனது பேட்டிங் பொறுத்தவரை எனது ஷாட்டிற்கு ஏற்ற பகுதிகளில் பிட்ச் செய்தால், நிச்சயம் வாய்ப்பை பயன்படுத்துவேன். அப்படிதான் எதிரணி பவுலர்கள் மீது அழுத்தம் கொடுக்க முடியும்.
இன்றைய ஆட்டத்தில் கிட்டத்தட்ட 30 ரன்கள் குறைவாக தான் சேர்த்திருக்கிறோம். ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு அசாதாரணமாக இருந்தது. இப்படியொரு பந்துவீச்சை ஒவ்வொரு நாளும் பார்க்க முடியாது. இன்றைய இன்னிங்ஸில் பவுலிங்கை தொடங்கிய போது, 2 விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இருப்பதால், நிச்சயம் அவர்கள் மீது பந்தையம் கட்டலாம். இன்றும் எங்கள் பவுலர்கள் பந்தயம் அடித்துள்ளார்கள். சூழலுக்கு தகுந்தவாறு பவுலிங் செய்து மிரட்டிவிட்டனர்.
இந்த பிட்சில் ஸ்விங்கும் இருந்தது. பிற்பாதியில் ஸ்பின்னும் இருந்தது. எந்த இடத்தில் பிட்ச் செய்தால் பேட்ஸ்மேன்களுக்கு சந்தேகம் வருமோ, சரியாக அந்த இடத்தில் பிட்ச் செய்தார்கள். உலகக்கோப்பை தொடரின் சிறந்த பவுலிங் அட்டாக் இந்திய அணியில் உள்ளது என்று சொல்ல முடியும். ஏனென்றால் 2 சிறந்த ஸ்பின்னர்கள், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். அதேபோல் கூடுதலாக அவர்களுக்கு இணையான வீரர்களும் பெஞ்சில் இருக்கிறார்கள். ஆனால் போதுமான இலக்கை எட்டிய பின், பந்தை பவுலர்களிடம் கொடுத்தால், நிச்சயம் அவர்களால் மேஜிக் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.