லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை தழுவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
இதில் இங்கிலாந்து அணி முதலில் 387 ரன்கள் எடுக்க, இந்திய அணியும் அதே ஸ்கோருடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்சில் எந்த அணியில் முன்னிலை பெறாமல் சமநிலையில் இருந்தது.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இதில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 ரன்கள் எடுக்க, கேப்டன் ஸ்டோக்ஸ் 33 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 192 ரன்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. இந்திய அணியில் பந்து வீச்சு தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 22 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிராஜ்,பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயஸ்வால், டக் அவுட்டாகி இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றினார். இந்த சூழலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் திரும்பிய கருண் நாயர், இந்த தொடரில் பெரியதாக சாதிக்கவில்லை. இதனால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவர் ரன்களை சேர்த்து இந்திய அணியை கரை சேர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கருண் நாயர் வெறும் 14 ரன்களில் ஆட்டம் இழந்து இந்தியா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து விளையாடிய கேப்டன் கில் ஒரு பவுண்டரி எடுத்த நிலையில் 6 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதைப் போன்று நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 11 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு ரன்னில் வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணி 58 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தற்போது கடைசி நாள் ஆட்டம் மட்டும் இருக்கின்றது. இதில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்களும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஆறு விக்கெட்டுகளும் தேவைப்படுகிறது. களத்தில் கேஎல் ராகுல் 33 ரன்கள் உடன் இருக்கின்றார். தற்போது பேட்டிங்கில் பண்ட், நிதிஷ்குமார் ஜடேஜா வாஷிங்டன் சுந்தர் போன்ற பேட்ஸ்மேன் மட்டும்தான் இருக்கிறார்கள். இதனால் இது அணிகளுக்குமே தற்போது வெற்றி வாய்ப்பு ஏற்பட்டதால் கடைசி நாள் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.