மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் மதியநேர உணவு இடைவெளியின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கும் ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பந்து ஸ்விங் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனை காரணமாக வைத்து தான் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

ஆனால் பந்து எதிர்பார்த்தபடி பெரிய ஆபத்தை ஒன்றும் பேட்ஸ்மேன்களுக்கு வழங்கவில்லை. இதனால் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் அங்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக சில வலைகளை விரித்தனர்.
ஆனால் ஆசையே ஆபத்துக்கு காரணம் என்ற புத்தர் போல் அமைதி காத்து அந்த ஆபத்துகளை இந்திய வீரர்கள் எளிதாக கடந்தனர். இதனால் 26 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 74 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதேபோன்று ராகுல் 82 பந்துகளை எதிர் கொண்டு 40 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை ராகுல் படைத்தார். இதனிடையே, இந்திய அணியை பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் வரலாற்று சின்னங்களான தாஜ்மஹால் போன்றவை தற்போது கம்பீரமாக நிற்பதற்கு நல்ல அடித்தளமே காரணம்.
எனவே இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிக ரன்களை எடுப்பதற்கு தொடக்க வீரர்கள் நன்றாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுடைய பேட்டிங் பார்ப்பதற்கு வேண்டுமானால் உங்களுக்கு போர் அடிக்கலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்றால் இது போன்று தான் செயல்பட வேண்டும். அதேபோல் இந்திய அணிக்கு வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் தொடக்க வீரராக அமைந்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும் சஞ்சய் மஞ்சுரேக்கர் பாராட்டியுள்ளார்.