மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் உத்வேகத்தில் களமிறங்குகிறது.
ஒருவேளை நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்று விடும். இந்த தருணத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ராகுல் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால் கடந்த டெஸ்டில் சரியாக விளையாடததால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அனைவரின் பார்வையும் நம்பர் மூன்றாவது இடத்தில் யார் விளையாடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது.
கருண் நாயர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் அதனை ஏமாற்றி விட்டார். இதனால் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கம்பீரை பொறுத்தவரை மேலும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவெடுத்து இருக்கிறார். நான்காவது வீரராக கேப்டன் கில் விளையாட உள்ளார்.
இந்த சூழலில் ஐந்தாவது வீரராக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டும் விளையாடினால், கருண் நாயர் இடத்திற்கு துருவ் ஜூரலை விளையாடக் கூடும்.
ஆறாவது வீரராக ஆல் ரண்டர் ஜடேஜா விளையாடுவார். ஏழாவது வீரராக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற அதிக வாய்ப்பு இருக்கின்றது. நிதிஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம். இந்த நிலையில் எட்டாவது வீரராக குல்தீப் யாதவ்க்கு இடம் கிடைக்குமா. இல்லை சர்துல் தாக்கூருக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழலில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு தான் தற்போது பெரிய குறையாக இருக்கின்றது. ஆகாஷ் தீப், ஆர்ஸ்தீப் சிங் என இரண்டு வீரர்களும் தற்போது காயம் காரணமாக வெளியேறுகின்றார்கள். இதனால் பும்ரா, சிராஜ் 9 மற்றும் 10 ஆம் இடத்தில் விளையாடுவார். ஆனால் 11வது இடத்திற்கு யாரை தேர்வு செய்வது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அணியில் ஏற்கனவே இருக்கும் பிரசித் கிருஷ்ணாவை சேர்க்கலாமா? இல்லை தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர் அன்சூல் காம்போஜை சேர்க்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திருப்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிகின்றது.
இந்திய அணி பிளேயிங் லெவன் உத்தேசம்: 1, ஜெய்ஸ்வால், 2, ராகுல், 3, கருண் நாயர்/சாய் சுதர்சன்/ துருவ் ஜூரல், 4,சுப்மன் கில், 5, ரிஷப் பண்ட், 6, ஜடேஜா, 7, வாசிங்டன் சுந்தர், 8, சர்துல் தாக்கூர்/ குல்தீப் யாதவ், 9, பும்ரா, 10, முகமது சிராஜ், 11, பிரசித் கிருஷ்ணா