மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் செய்தியாளர்களை சந்தித்து 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தார்.
இதில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் கில் மற்றும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனுபவ வீரர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய தொடரில் கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கினர். இதனால் இங்கிலாந்து தொடரிலும் கே எல் ராகுல் ஜெய்ஸ்வால் ஜோடிக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். மூன்றாவது வீரராக சாய் சுதர்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவது வீரராக கில் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஐந்தாவது வீரராக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆறாவது வீரராக இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் விளையாடக்கூடும். ஏழாவது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கும் எட்டாவது வீரராக சர்துல் தாக்கூருக்கும் விளையாடக்கூடும்.
ஒன்பதாவது வீரராக பும்ரா மற்றும் பத்தாவது வீரராக முகமது சிராஜ் ஆகியோர் விளையாடக் கூடும். ஒருவேளை இந்திய அணி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் களமிறங்கினால் 11 வது வீரராக பிரசித் கிருஷ்ணா அல்லது ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இடம் பெறுவார். ஒருவேளை இந்திய அணி சுழற் பந்துவீச்சை எடுக்கக்கூடிய ஆடுகளத்தில் விளையாடினால், 11 வது வீரராக குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை அபிமன்யு ஈஸ்வரனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றால் சாய் சுதர்சனுக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் மூன்றாவது வீரராக விளையாடலாம். இல்லையென்றால் ராகுல் மூன்றாவது வீரராக களம் இறங்கி ஈஸ்வரன் தொடக்க வீரராக விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் சாய் சுதர்சன் வெளியே அமர வேண்டும்.