பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் 500 ரன்கள் மேல் குவித்து அசத்தி இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 500 ரன்களை கடந்து இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இதேபோன்று 500 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கீழ் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்த சூழலில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டம் இழக்க, ரவீந்திர ஜடேஜா 89 ரன்களில் வெளியேறினார்.

ஒருபுறம் வீரர்கள் பெரிய ஸ்கோர் எடுக்க தடுமாறினாலும், மறுபுறம் கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 199 பந்துகளில் முதல் சதத்தை பூர்த்தி செய்த சுப்மன் கில், 311 பந்துகளில் தன்னுடைய இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதில் 21 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 500 ரன்கள் கடந்து வலுவான நிலையில் இருக்கின்றது.
இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 500 ரன்கள் கடந்து இருக்கிறது. கடைசியாக இந்திய அணி 2007 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் 664 ரன்கள் எடுத்தது. இதுவரை இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி ஏழாவது முறையாக 500 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறது. முதல் முறையாக 1967 ஆம் ஆண்டு லீட்ஸ் டெஸ்டில் 510 ரன்களும், லண்டன் ஓவல் மைதானத்தில் 1990 ஆம் ஆண்டு 606 ரன்களும் அடித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு நாட்டிங்காம் டெஸ்டில் 521 ரன்களும், 2002 ஆம் ஆண்டு லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் 628 ரன்களும் லண்டன் ஓவல் மைதானத்தில் 2002 ஆம் ஆண்டு 508 ரன்களும் , 2007 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் 664 ரன்களும், இந்திய அணி எடுத்திருந்தது.
தற்போது பிர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 2025 ஆம் ஆண்டு 18 ஆண்டுகள் கழித்து 500 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த சூழலில் முதல் இன்னிங்சில் இந்தியா அவசரப்பட்டு டிக்ளர் செய்து விடக்கூடாது. 10 விக்கெட்டுகள் விழும் வரை எவ்வளவு ரன்கள் அடிக்க முடியுமோ அந்த அளவுக்கு இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 700 ரன்கள் தொட்டுவிட வேண்டும். அதன் பின் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் கிட்டத்தட்ட 500 ரன்களில் (நிச்சயம் அடித்துவிடும்) சுருட்டி விட வேண்டும். இதன்பின் பாலோ ஆன் கொடுத்து மீண்டும் இந்திய வீரர்கள் பந்து வீசி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த போட்டி சமனில் முடிவடைந்து விடும். இந்த டெஸ்டில் பும்ராவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.