லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 375 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் பங்கேறி இருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஷ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அபாரமாக சதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 471 ரன்கள் எடுத்தது.

இதற்கு பதிலடி தந்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆரம்பித்தாலும் பின்வரிசை வீரர்கள் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்தது. ஆறு ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், சாய் சுதர்சன் 32 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 90 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில் 8 ரன்களில் ஆட்டம் இழக்க, தொடக்க வீரர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. அபாரமாக விளையாடிய பண்ட் 118 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களும் சதம் விளாசிய இரண்டாவது விக்கெட் கீப்பர், இங்கிலாந்து மண்ணில் இத்தகைய சாதனையை செய்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மறுபுறம் அபாரமாக விளையாடிய கேஎல் ராகுல் 18 பவுண்டரிகளை விளாசி 137 ரன்கள் அடித்தார்.
இங்கிலாந்து மண்ணில் மூன்று சதம் அடித்த முதல் ஆசிய தொடக்க வீரர் என்ற பெருமையும் ராகுலுக்கு கிடைத்தது.இந்த ஜோடி ஆட்டமிழந்தவுடன் மற்ற இந்திய வீரர்கள் தடுமாறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் 20 ரன்களில் வெளியேற ஜடேஜா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் சேர்த்தார். சிராஜ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து வீரர் ஜோஸ் டாங்க, ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் ஹாட்ரிக் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
அதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்திருக்கிறது. இந்த லீட்ஸ் மைதானத்தில் நான்காம் இன்னிங்ஸில் வெற்றிகரமாக ஏட்டப்பட்ட இலக்கு என்றால் அது 404 ரன்கள் ஆகும். ஆனால் அது 1948 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியால் எட்டப்பட்டது. அதன் பிறகு இங்கிலாந்து அணி இதே மைதானத்தில் 2019 ஆம் ஆண்டு 362 ரன்கள் எட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதித்தது.
இதனையடுத்து, 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி 6 ஓவர்களை எதிர்கொண்டது. 4வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டு இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மேலும் 350 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவைப்படுகிறது.