லக்னோ: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 230 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 29வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ மைதானத்தில் சேஸிங் செய்த அணிகளே பெரும்பாலும் வென்றுள்ளதால் இங்கிலாந்து அணி சேஸிங் செய்ய முடிவு எடுத்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.
அதில் ரோகித் சர்மா அதிரடியாக ரன்கள் சேர்த்த போது, சுப்மன் கில் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த விராட் கோலி 9 பந்துகளில் டக் அவுட்டாகி வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களுக்கு ஷார்ட் பாலில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகாளை இழந்து திணறியது. இதன்பின் ரோகித் சர்மா - கேஎல் ராகுல் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி 25 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
இதன்பின் இந்திய அணியின் இரு பேட்ஸ்மேன்களும் ரஞ் குவிப்பை சிறிது வேகப்படுத்தினர். ஆனால் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் திடீரென 39 ரன்களில் ஆட்டமிழக்கம், மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் அமைதியாகினர். இருப்பினும் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த ரோகித் சர்மா, சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியின் ரஷீத் பந்துவீச்சில் ரோகித் சர்மா 87 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

ரோகித் சர்மா நடையை கட்டிய பின் ஜடேஜா 8 ரன்களிலும், முகமது ஷமி 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 183 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஆனால் பும்ராவை ஒருமுனையில் வைத்து கொண்டு சூர்யகுமார் யாதவ் சில பவுண்டரிகளை அதிரடியாக விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய அவர் 49 ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.