மும்பை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 254 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த அரை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. காரணம் மும்பை வான்கடே மைதானம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு பெய்தால் அது நிச்சயம் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு தான் சாதகமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இங்கிலாந்து அணியில் பல அதிரடி வீரர்கள் இருப்பதால், இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருந்தது. இந்த சூழலில் முதலில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா ஏழு பந்துகளில் ஒன்பது ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த சூழலில் சஞ்சு சாம்சன் அதிரடி காட்ட அவர் ஆட்டத்தில் இரண்டு புள்ளி இரண்டாவது ஓவரில் கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பை ஹாரி புரூக் மிஸ் செய்தார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஒரு லைஃப் கிடைத்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட அவர் அதிரடி காட்டி 6 பவுண்டரி என தெறிக்க விட்டார்.
அதேபோன்று மூன்றாவது வீரராக விளையாட களமிறங்கி இசான் கிஷனும் அதிரடி காட்டி நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 18 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 52 ரன்கள் கடந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 45 பந்துகளை எதிர்கொண்டு 97 ரன்கள் சேர்த்தது.

இது டி20 உலக கோப்பை நாக் அவுட் போட்டியில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்த தருணத்தில் நடுவரிசையில் விளையாடிய சிவம் துபே தனது வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். சிக்ஸர் பவுண்டரி என அவர் பறக்க விட்டார்.
5வது வீரராக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழக்க, அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் சிவம் துபே, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

7வது வீரராக களமிறங்கிய திலக் வர்மா, 3 சிக்சர்கள் விளாசி 7 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா இறுதியில் தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 பந்துகளில் 27 ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் சேர்த்து வலுவான இலக்கை நிர்ணயித்திருக்கிறது இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி ஆட்டத்தில் வரும் எட்டாம் தேதி நியூசிலாந்து எதிர்கொள்ளும்.