மான்செஸ்டர்: மான்செஸ்டரில் நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்துள்ளார். இந்தச் செய்தி, இந்திய அணிக்கு மேலும் ஒரு சவாலாக அமைந்துள்ளது. இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, மற்றும் சிராஜ் ஆகியோருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிப்பது குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் இந்த செய்தி பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சக வீரர் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது அர்ஷ்தீப் சிங்கின் கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக, இந்திய அணியின் மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர், அர்ஷ்தீப் சிங்கிற்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். காயத்தின் தன்மை மற்றும் அவருக்கு தையல் போட வேண்டுமா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். இதன் பிறகே, அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க, இந்திய அணிக்கு எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த முக்கியமான சூழ்நிலையில், அர்ஷ்தீப் சிங்கின் காயம் அணி நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் இன்னும் அறிமுகமாகாத போதிலும், அர்ஷ்தீப் சிங் நான்காவது டெஸ்டில் களமிறக்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, அவருக்கு இந்த தொடரில் ஒரு போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என கூறப்பட்டது. மேலும், பிரசித் கிருஷ்ணா கடந்த போட்டிகளில் எதிர்பார்த்த அளவு சோபிக்காததால், இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அணியின் பந்துவீச்சுக்கு புதிய பரிமாணத்தை அளிப்பார் என கருதப்பட்டது.
அர்ஷ்தீப் சிங் ஒருவேளை விளையாட முடியாமல் போனால், அது இந்திய அணியின் திட்டமிடலை நிச்சயம் பாதிக்கும். பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று துணைப் பயிற்சியாளர் கூறியுள்ளார். தொடர் ஆபத்தில் இருப்பதால், மான்செஸ்டர் டெஸ்டில் பும்ராவை விளையாட வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக, முகமது சிராஜுக்கு ஓய்வளித்துவிட்டு, ஷர்துல் தாக்கூர் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம். பேட்டிங்கில், ஃபார்மில் இல்லாத கருண் நாயருக்கு பதிலாக, சாய் சுதர்சன் அல்லது துருவ் ஜுரெல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஷ்தீப் சிங்கின் காயம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் குணமடைந்து, அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.