பெங்களூரு: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா எப்போது பயிற்சியை தொடங்குவார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா பந்துவீசும் போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா களமிறங்கவே இல்லை. இதையடுத்து அவரது காலுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய போது, எலும்பு முறிவு ஏற்படவில்லை என்று தெரிய வந்தது. இருப்பினும் ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் வீக்கம் குறையவில்லை.

இதனால் ஹர்திக் பாண்டியா காயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாத இந்திய அணி நிர்வாகம், அவர் முழுமையாக குணமடையும் வரை களமிறக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மட்டுமல்லாமல், நாளை மறுநாள் நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மற்றும் நவ.2ல் நடக்கவுள்ள இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் காயம் பூர்ணமாக குணமடையும் வரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியிலேயே ஹர்திக் பாண்டியாவை தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து குணமடைய சில ஊசிகள் எடுத்துக் கொண்டால் வேகமாக குணமடையலாம் என்று கூறப்பட்டாலும், ஹர்திக் பாண்டியா குணமடைய ஊசிகள் வேண்டாம் என்று இந்திய அணி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா உடல்நிலை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதில் நாளை மறுநாள் ஹர்திக் பாண்டியா பயிற்சியை தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா விரைவில் முழு உடல்தகுதியை எட்டுவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இதுவரை 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால், இன்னும் 2 போட்டிகளில் வெற்றிபெற்றாலே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். அதில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் இரு போட்டிகள் இருப்பதால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.