கயானா: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், கேப்டன் ரோகித் சர்மா எமோஷனலாக அமர்ந்திருந்த காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வறையில் எமோஷனலாக இருந்த ரோகித் சர்மாவை சந்தித்த சகவீரர் விராட் கோலி அவருக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை விளாசியது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் சேர்த்தனர்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய பவுலர்களில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பழீதீர்க்கும் வகையில் இந்திய அணி, மீண்டும் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியிலேயே வீழ்த்தி சம்பவம் செய்துள்ளது.

இந்த வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எமோஷனலாக காணப்பட்டார். இங்கிலாந்து வீரர்களுடன் கைகுலுக்கிவிட்டு நேராக இந்திய அணியின் ஓய்வறையில் வாசலில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார். அப்போது ரோகித் சர்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியில் வர, அங்கே சென்ற விராட் கோலி அவருக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினார்.
இந்த காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 2022 டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணி அடைந்த தோல்வி, ரோகித் சர்மாவின் வாழ்க்கையை மாற்றியது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தர். எந்த அணிகளிடம் தோல்வியடைந்தாரோ, அதே அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தி ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.