கயானா: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது 4 ஸ்பின்னர்களை அழைத்து சென்று என்ன செய்யப் போகிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினர். தற்போது ஸ்பின்னர்களின் உதவியுடன் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது.

இதன்பின் ஆடிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்துள்ளது. இந்திய அணியின் ஸ்பின்னராக அக்சர் படேல் 4,6,8 ஆகிய ஓவர்களை வீசிய போது, ஒவ்வொரு ஓவரின் முதல் பந்திலும் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த போட்டியில் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியது. ஆனால் இந்திய அணி 11 ஓவர்களை வீசி 56 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. இரு அணிகளிலும் ஸ்பின்னர்களும் தாக்கமே வெற்றி, தோல்விக்கு காரணமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் சாம் கரண் மற்றும் ஜோர்டன் இணைந்து 5 ஓவர்களில் 62 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதனையறிந்து ரோகித் சர்மா இந்திய அணியில் 5.4 ஓவர்கள் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு பயன்படுத்தினார். இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் சாஹல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அப்போது கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் 4 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி செல்ல தேவையில்லை என்று வெளிப்படையாக விமர்சித்தனர். இதுதொடர்பாக ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, நான் 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று இப்போது கூறப் போவதில்லை. அமெரிக்காவில் கால் வைத்த பின் கூறுகிறேன் என்றார்.
ஆனால் அமெரிக்காவிலும் 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று ரோகித் சர்மா கூறவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் விளையாடிய அத்தனை போட்டிகளிலும் இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கி வேட்டையாடியுள்ளது. அக்சர் படேல் 8 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ஜடேஜா எகனாமிக்கலாக வீசி இருக்கிறார். சாஹல் மாற்று வீரருக்கான தேர்வாக அமைந்துள்ளதை ரோகித் சர்மா செயலில் நிரூபித்து பதிலடி கொடுத்துள்ளார்.