புனே : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 12 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் இழந்த பிறகும் நல்ல ஒரு ஸ்கோரை எடுத்து இந்திய அணி தற்போது வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் தொடரையும் இந்தியா கைப்பற்றி இருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய வீரர் சிவம் துபேவுக்கு கண்கஷன் ஏற்பட்டதாக கூறி அவருக்கு பதில் ஹர்ஷித் ரானா களம் இறங்கியது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. எனினும் இது குறித்து ஜாஸ் பட்லர் பரிசளிக்கும் விழாவில் எந்த ஒரு குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.

இதை தொடர்ந்து வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார், "எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறந்த ஒரு பங்கை வெற்றிக்கு ஆற்றி இருக்கிறார்கள். அதுவும் புனே மக்கள் எங்களுக்கு உறுதுணையாக நின்றார்கள். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததெல்லாம் ரொம்ப தவறு. ஆனால் எங்கள் அணி வீரர்கள் பாசிட்டிவாக இருந்து அணியை சரிவிலிருந்து மீட்டார்கள்".
"சிவம் துபேவும், ஹர்திக் பாண்டியாவும் இணைந்து தங்களுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார்கள். இதை தான் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். வலைப்பயிற்சியில் எப்படி விளையாடுகிறீர்களோ, அதே போல் களத்திலும் விளையாடி ரன்களை சேருங்கள்".
"இந்த தொடருக்காக நாங்கள் சிறப்பான முறையில் பயிற்சி செய்தோம். அதை போட்டியிலும் நாங்கள் வெளிப்படுத்தினோம். இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் சரியான திசையை நோக்கி செல்கின்றோம். பவர் பிளேவிற்கு பிறகு ஏழு முதல் 10 ஓவரில் நாங்கள் ஆட்டத்தில் மீண்டும் எங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்று நினைத்தேன்".
"அதேபோல் எங்கள் அணி வீரர்கள் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதேபோன்று ஹர்ஷித்ரானா மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அணிக்குள் வந்து எங்களுடைய வேலையை அபாரமாக முடித்து விட்டார். அவருடைய பந்துவீச்சு பிரமிக்க வைத்தது" என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.