விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஓல்லி போப் இருவரையும் அடுத்தடுத்து ஓவர்களில் வீழ்த்தி இந்திய அணியின் பும்ரா அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தை 336 ரன்களுடன் தொடங்கிய இந்திய அணி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபார ஆட்டத்தால் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 209 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், அஹ்மத் மற்றும் பஷீர் மூவரும் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் கிராலி - பென் டக்கெட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் முகேஷ் குமார் இருவரும் அட்டாக்கை தொடங்கினர். பவுண்டரிகள் மூலமாக ரன்களை குவித்த இருவரும், பும்ரா வீசிய ஒரு ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகளை விளாசி அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து 10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்களை குவித்திருந்தது.
பின்னர் அட்டாக்கில் வந்த குல்தீப் யாதவ் முதல் ஓவரிலேயே டக்கெட் விக்கெட்டை வீழ்த்த, பின்னர் அரைசதம் அடித்த கிராலி அக்சர் படேல் பந்தில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் ஜோ ரூட் மற்றும் போப் இருவரும் களத்தில் இருக்க, மீண்டும் பும்ராவை அட்டாக்கில் கொண்டு வந்தார் ரோகித் சர்மா. ஜோ ரூட்டிற்கு வீசிய முதல் ஓவரிலேயே இன்-ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர் என்று மாற்றி மாற்றி வீச திணறடித்தார். இதனை பயன்படுத்தி ஒரு பந்தை நேராக வீச, அந்து பந்து ரூட் பேட்டில் பட்டு ஸ்லிப் திசைக்கு சென்று சுப்மன் கில் கைகளில் தஞ்சம் புகுந்தது.
இதனால் ஜோ ரூட் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பும்ரா பந்தில் மீண்டும் ஆட்டமிழந்ததை ஏற்க முடியாமல் மைதானத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தினார் ஜோ ரூட். பும்ரா மற்றும் ஜோ ரூட் இருவரும் 20 இன்னிங்ஸில் எதிருக்கு எதிராக விளையாடியுள்ள நிலையில், அதில் ஜோ ரூட்டை 8 முறை பும்ரா வீழ்த்தியுள்ளார். அதேபோல் கடந்த போட்டியில் சதம் விளாசிய ஓல்லி போப்பிற்கு, இன் ஸ்விங்கிங் யார்க்கரை வீச, அந்த பந்து ஸ்டம்புகளை பறக்கவிட்டு சென்றது. இதனால் அவரும் 23 ரன்களில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 136 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.