கயானா : டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ள நிலையில், கள நடுவர்கள், 4வது நடுவர் மற்றும் 4வது நடுவர் ஆகியோர் யார் என்ற விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணிக்கு ராசியில்லாத நடுவராக பார்க்கப்படும் ரிச்சர்ட் கெட்டில்பரோ பெயர் இல்லாததால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. அதன்படி முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளும், 2வது அரையிறுதியில் இங்கிலாந்து - இந்தியா அணிகளும் விளையாடுகின்றன. இந்த நிலையில் அரையிறுதி சுற்றுக்கான நடுவர்கள் யார் என்ற விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் மோதவுள்ள முதல் அரையிறுதி போட்டிக்கு கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் நிதின் மேனன் இருவரும் செயல்படவுள்ளனர். டிவி அம்பயராக ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றும் 4வது நடுவராக அஹ்சன் ராசா செயல்படவுள்ளார். அதேபோல் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டிக்கு கிறிஸ் கஃபானே மற்றும் ராட் டக்கர் இருவரும் கள நடுவர்களாக செயல்படவுள்ளனர்.
அதேபோல் 3வது அம்பயராக ஜோயல் வில்சன் மற்ரும் பவு ரெய்ஃபல் 4வது அம்பயராகவும் செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் ஐசிசி-க்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் கெட்டில்பரோ இந்திய அணிக்கு ராசியில்லாத நடுவராக பார்க்கப்பட்டு வருகிறார்.
இதுவரை ஐசிசி தொடர்களில் இந்திய அணி விளையாடியுள்ள நாக் அவுட் போட்டிகளில் நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ செயல்பட்ட போது, ஒருமுறை கூட இந்திய அணி வென்றதில்லை. இவர் நடுவராக இருந்த 2014ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதேபோல் 2015 உலக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா அடைந்த தோல்வி, 2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
அப்போது ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவர். அதேபோல் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் தோனி ரன் அவுட்டான போது, நடுவராக இருந்து கெட்டிபரோ கொடுத்த ரியாக்ஷன் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
அதேபோல் 2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் கெட்டில்பரோ. அதேபோல் 2023 உலகக்கோப்பையிலும் கெட்டில்பரோ தான் நடுவராக இருந்தார். இப்படி இவர் நடுவராக வந்த போதெல்லாம் இந்திய அணி சொதப்பியதா அல்லது இந்திய அணி சொதப்பும் போதெல்லாம் இவர் நடுவராக உள்ளாரா என்று ரசிகர்கள் சந்தேகப்படும் அளவிற்கு பிரபலமாகியுள்ளார். தற்போது ரிச்சர்ட் கெட்டில்பரோ நடுவராக இல்லாததால், அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எளிதாக இந்திய அணி வீழ்த்தும் என்று பார்க்கப்படுகிறது.