ஐதராபாத் : இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 450 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்யும் என்று பதிவிட்ட முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனை இந்திய ரசிகர்கள் ட்ரால் செய்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் தரையிறங்கியது முதலே பேஸ் பால் குறித்த பேச்சுகள் அதிகமாகியது. 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணி களமிறங்கியதாக அந்நாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் மீடியாக்கள் கொண்டாடி மகிழ்ந்தன. பேஸ் பாலுக்கு எதிராக இந்திய அணியின் பவுலிங் தாக்கு பிடிக்காது என்று பேச்சுகள் எழுந்தது.

இந்த நிலையில் ஐதராபாத் மைதானத்தில் தொடங்கிய இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து வர்ணனையாளரும், இங்கிலாந்து முன்னாள் வீரருமான கெவின் பீட்டர்சன், முதல் நாளில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 450 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்யும் என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேலின் சுழலில் சிக்கி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மற்றும் பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை குவித்துள்ளது. இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்களையும், சுப்மன் கில் 14 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்கள் 3 பேருக்கும் சரியான லைன் மற்றும் லெந்த் பிடிபடவில்லை.
பேஸ் பால் குறித்தும் அட்டாக்கிங் கிரிக்கெட் குறித்தும் பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர்கள், இங்கிலாந்து அணியின் அனுபவமற்ற ஸ்பின்னர்கள் குறித்து பேசாமல் அமைதி காத்து வந்தனர். அதனை முதல் நாளிலேயே இந்திய அணி அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனின் ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டான நிலையில், இந்திய ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.