இந்த பவுலிங்கை வைத்து 2027 உலககோப்பையை எல்லாம் இந்திய அணியால் வெல்ல முடியாது.. புஜாரா சாடல்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் புஜாரா வலியுறுத்தியுள்ளார். அப்போதுதான் 2027 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விளையாடாத நிலையில், இங்கிலாந்து பேட்டர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நிலைகுலைந்தனர். குர்னூர் பிரார், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய நான்கு பேர் அடங்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணி, தங்களது 40 ஓவர்களில் 317 ரன்களை வாரிக்கொடுத்தது.

இதன் விளைவாக, இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 387/3 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு இந்தியாவின் பந்துவீச்சு குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் பேசிய புஜாரா, "இந்தத் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. பும்ரா அணியில் இருந்தபோது பந்துவீச்சு முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
எனவே, அவர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். 2027 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமானால், இந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சரியாகச் செய்ய வேண்டும். மேலும், இந்தியாவிற்கு ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் தேவைப்படுகிறார். உலகக் கோப்பைக்குள் அது யார் என்பதைக் கண்டறிவது அணிக்கு மிகவும் முக்கியம்" என்று கூறினார்.
"இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியை 350 ரன்களுக்குள் சுருக்கியிருந்தால், இந்த இலக்கைத் துரத்திப் பிடித்திருக்கலாம். ஆனால் 387 ரன்கள் என்பது சற்று அதிகம். ஆனாலும், இந்திய பேட்டர்கள் விளையாடிய விதம் பாராட்டுக்குரியது. அவர்கள் ஆட்டத்தை முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருந்ததோடு, பவர்பிளேயில் இங்கிலாந்து செய்ததைப் போலவே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 40-வது ஓவர் வரை இந்திய அணி வெற்றியை நோக்கியே பயணித்தது" என்றார்.
"வெளியில் பல விமர்சனங்களும் பேச்சுகளும் இருந்தன. ஆனால், ரோகித் அதை கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. அவரது உடல் மொழியை பார்க்கும்போது அவரிடம் எந்த அழுத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் தொடக்கத்தில் சற்று நேரம் எடுத்துக்கொண்டார், ஆனால் செட் ஆன பிறகு அதிரடியை ஆரம்பித்தார். அவர் ரன் வேகத்தை உயர்த்திய விதம், அவரது மன உறுதியை நமக்குக் காட்டுகிறது. இதனால் தான் அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார்" என்று புஜாரா கூறினார்.
39 வயதாகும் ரோஹித், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 18.50 மற்றும் 55-க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டுடன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து, தனது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியிருந்தார். இருப்பினும், அவர், இந்த சதத்தின் மூலம் விமர்சகர்களின் வாயை தற்காலிகமாக அடைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications

