லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பந்து மாற்றும் விவகாரத்தில் இங்கிலாந்து அணிக்குச் சாதகமாக நடுவர்கள் செயல்படுவதாக இந்திய அணி நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) ரெப்ரீ-இடம் புகார் அளித்துள்ளது. குறிப்பாக, லார்ட்ஸ் டெஸ்டின்போது மாற்றப்பட்ட பந்து, போட்டியின் முடிவையே மாற்றியதாகக் கூறப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. பந்துகளைத் தேர்வு செய்வதில் இங்கிலாந்து அணிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இது இந்திய அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அணி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இந்தியாவின் இரண்டாவது புதிய டியூக்ஸ் பந்து வெறும் 10 ஓவர்களிலேயே அதன் வடிவத்தை இழந்தது. இதனால், பந்தை மாற்றும்படி இந்திய அணி கேட்டுக்கொண்டது. ஐசிசி விதிகளின்படி, மாற்றப்படும் பந்தும் கிட்டத்தட்ட அதே அளவு தேய்மானத்துடன் இருக்க வேண்டும்.
ஆனால், நடுவர்கள் கொடுத்த மாற்றுப் பந்து சுமார் 30 முதல் 35 ஓவர்கள் வரை பயன்படுத்தப்பட்ட பழைய பந்து என இந்திய அணி தரப்பில் கூறப்படுகிறது. களத்தில் இருந்த நடுவர்களிடம் 10 ஓவர்கள் பயன்படுத்தப்பட்ட பந்து கையிருப்பில் இல்லை என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த பந்து மாற்றத்திற்கு முன்பு வரை, இந்திய அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. குறிப்பாக, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வெறும் 14 பந்துகளில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்போது இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.
ஆனால், பழைய பந்து கொடுக்கப்பட்ட பிறகு, ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. இந்திய பந்துவீச்சாளர்களால் ஸ்விங் செய்ய முடியவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் எளிதாக ரன்களைக் குவித்தனர். இதன் விளைவாக, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 355 ரன்கள் குவித்தது. இறுதியில், இந்திய அணி அந்தப் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தச் சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணி நிர்வாகம், "மாற்றுப் பந்தின் வயது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால், நாங்கள் உருக்குலைந்த பந்திலேயே தொடர்ந்து பந்து வீசியிருப்போம்" என்று கூறியுள்ளது.
மேலும், மாற்றுப் பந்து எத்தனை ஓவர்கள் வீசப்பட்டது என்பது குறித்து அணிகளுக்குத் தெரிவிக்கப்படாத வகையில் இருக்கும் தற்போதைய ஐசிசி விதியில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் இந்திய அணி வலியுறுத்தியுள்ளது. இந்தத் தொடர் முழுவதும் டியூக்ஸ் பந்தின் தரம் குறித்து இரு அணிகளுமே அதிருப்தி தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.