லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா 'ஏ' அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியது. தற்போது இந்திய டெஸ்ட் அணி வீரர்களும், இந்தியா 'ஏ' அணியைச் சேர்ந்த வீரர்களும் ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளனர்.
இந்தப் பயிற்சிப் போட்டி கென்ட் நகரில் உள்ள பெக்கேன்ஹாம் கவுன்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சிப் போட்டியின் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அந்த மைதான பிட்ச் நிர்வாகிக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் தான் இந்திய அணியின் பயிற்சியாளர் அல்லது கேப்டன் தங்களுக்கு ஏற்ற பிட்சை தயாரிக்குமாறு சொல்வார்கள். அப்படி சொல்வது தவறு என்ற வாதமும் உள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்குள்ள மைதான பிட்ச் நிர்வாகியிடம் பயிற்சி போட்டிக்கு எப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென அதிகாரத்துடன் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது இந்திய அணியின் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் அணியாக இந்திய கிரிக்கெட் அணி இருப்பதுவே இதற்கு காரணம் என்றாலும், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கேட்டதில் ஒரு நியாயமும் உள்ளது.
இந்தியா - இந்தியா ஏ அணிகள் மோதும் பயிற்சிப் போட்டிக்கான பிட்ச் நன்றாக இருக்க வேண்டும் எனவும், பேட்டிங் செய்ய மட்டுமே சாதகமாக இருக்கக் கூடாது என்றும், பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்கும் சரிசமமான வாய்ப்பை அளிக்கும் ஒரு நல்ல டெஸ்ட் பிட்ச்சாக இருக்க வேண்டும் எனவும் கம்பீர் கேட்டு இருக்கிறார்.
ஏனெனில், சமீபத்தில் நடந்த இந்தியா 'ஏ' மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு பயிற்சிப் போட்டிகளும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இரண்டு போட்டியிலும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. எனவே, அந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளும் பந்துவீச்சாளர்களுக்கு உதவவில்லை.
மேலும், இந்திய அணி மற்றும் இந்தியா 'ஏ' அணி மோதும் பயிற்சிப் போட்டி பேட்டிங்கின் சொர்க்கபுரியான பிட்சில் நடந்தால், அதை வைத்து அடுத்து நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான பிளேயிங் லெவனை முடிவு செய்ய முடியாது. அதே போல பச்சை நிறத்தில் அதிக புற்கள் இருக்கும் மைதானத்தில் நடந்தால் அது வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதனாலேயே கௌதம் கம்பீர் இருதரப்புக்கும் சரிசமமான பிட்சை தயார் செய்ய வேண்டும் என கேட்டு இருக்கிறார்.
வரும் ஜூன் 20 முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4 வரை மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கேப்டனாக தனது முதல் டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் என்ன செய்யப் போகிறார் என்ற ஆவல் எழுந்துள்ளது.