மும்பை: 2024 ஆம் ஆண்டில் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி பேட்டிங் ஃபார்ம் மிகப்பெரிய சரிவை சந்தித்திருந்தது. அதே போல தற்போது சூர்யகுமார் யாதவும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து பேட்டிங்கில் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறார். அது இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சமீபத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடின. அந்த தொடரில் சூர்யகுமார் யாதவும் 5 போட்டிகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக 14 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவரது சராசரி 5.60 என்பதாக மட்டுமே இருந்தது. 2024 ஆம் ஆண்டிலும் அவரது பேட்டிங் சராசரியாகவே இருந்தது.

அப்போது அவர் 17 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 429 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவரது பேட்டிங் சராசரி 26.81 என்பதாகவே இருந்தது. அதற்கு முன்பு அவரது பேட்டிங் சராசரி ஒவ்வொரு ஆண்டும் 40க்கு மேல் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட நிலையில் அவரது பேட்டிங் சராசரி 2024 ஆம் ஆண்டில் 26 என்பதாக சரிந்தது.
தற்போது 2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்து டி20 தொடரில் மட்டும் ஆடி இருக்கும் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் சராசரி 5.6 என்பதாக உள்ளது. டெஸ்ட் அணியில் இதே போல ஃபார்ம் இழந்து இருக்கும் ரோஹித் சர்மாவை நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருவதை போல சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழத் தொடங்கி இருக்கின்றன.
ஆனால், யாரும் அவரை அணியை விட்டே நீக்க வேண்டும் என கூறவில்லை. ஏனெனில், அவருக்கு கேப்டன் பதவி அதிக சுமையை அளிப்பதால் தான் அவரால் பேட்டிங்கில் சரியாக செயல்பட முடியவில்லை என்ற சந்தேகம் உள்ளது. இந்தி அணி அடுத்து 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் டி20 தொடரில் விளையாட உள்ளது. இடைப்பட்ட காலத்தில் சூர்யகுமார் யாதவ் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். அதனால் இப்போதைக்கு அவருக்கு எந்த சிக்கலும் இல்லை.