மும்பை: இந்திய ஒரு நாள் அணியில் இரட்டை சதம் அடித்த ஐந்து வீரர்களில் ஒருவர் தான் இஷான் கிஷன். அவர் 2022 ஆம் ஆண்டு அந்த இரட்டை சதத்தை அடித்தபோது இந்திய அணியின் எதிர்காலம் என பலராலும் வர்ணிக்கப்பட்டார். ஆனால், அவர் இந்திய அணியில் ஒரு மாற்று வீரராகவே நீண்ட காலம் செயல்பட்டு வந்தார்.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் இஷான் கிஷன் இந்திய அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்து, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது பாதியில் விலகினார். அதன் பின் அவரை உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது. ஆனால், அவர் அதை செய்யவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

அதன் பின் இஷான் கிஷன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதும் இல்லை. அவர் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். 2024 ரஞ்சி டிராபி தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனாலும், அவருக்கு இந்திய அணியில் இருந்து அழைப்பு வரவில்லை. இதை அடுத்து மனமுடைந்ததால் அவரது பேட்டிங் ஃபார்மும் தற்போது மோசமாகி உள்ளது.
சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் இஷான் கிஷன் ஆறு போட்டிகளில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் 7 போட்டிகளில் 316 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் ஃபார்ம் சராசரியாக இருப்பதை சுட்டிக்காட்டி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
இஷான் கிஷனுக்கு இந்திய ஒருநாள் அணியிலும் இடம் அளிக்கப்படாது என கூறப்படுகிறது. பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தால் அவரின் எதிர்காலம் சேர்ந்து குறியாகி இருப்பதை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியில் திறமையின் அடிப்படையில் மட்டுமே அணியில் தேர்வு செய்ய வேண்டும். அந்த வீரர் இரட்டை சதம் அடித்த நிலையில் அவருக்கு ஏன் அணியில் நிலையான வாய்ப்பு வழங்கவில்லை? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
இஷான் கிஷனை குறி வைத்து இருக்கும் பிசிசிஐ, தொடர்ந்து இந்திய அணியில் தேர்வு செய்ய மறுத்து வருகிறது. இதன் காரணமாகவே அவர் தன்னம்பிக்கையை இழந்து ஃபார்மை இழக்கவும் வாய்ப்புள்ளது.