மும்பை : இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷனிடம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுமாறு இந்திய அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது விவகாரம் வெளி வந்துள்ளது.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் இஷான் கிஷன். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாக மனசோர்வு என்று கூறிய இஷான் கிஷன், பாதியிலேயே இந்தியாவுக்கு திரும்பினார். இதையடுத்து துபாய் பறந்த இஷான் கிஷன், தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இது ரசிகர்களிடையே விவாதமாகியது.

பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன் ரஞ்சி டிராபி தொடர் தொடங்கியது. உள்ளூர் கிரிக்கெட்டில் மிகமுக்கிய தொடரான ரஞ்சி டிராபியிலும் இஷான் கிஷன் விளையாடவில்லை. இதையடுத்து முதல் 2 போட்டிகளில் இஷான் கிஷன் கழற்றிவிடப்பட்டு, அவருக்கு பதிலாக துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின்னரும் இஷான் கிஷன் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடவில்லை. பிசிசிஐ தரப்பில் மறைமுகமாக எவ்வளவோ முறை கூறப்பட்டும், ரஞ்சி போட்டிகளில் களமிறங்கும் எண்ணத்திலேயே இஷான் கிஷன் இல்லை. இதனால் கோபமடைந்த பிசிசிஐ, வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிஷனை நீக்கி அறிவித்தது.
இந்த நிலையில் இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது. அதில், இந்திய அணிக்கு திரும்புவதற்கு முன்பாக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுமாறு இந்திய அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் தரப்பில் இஷான் கிஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி நிர்வாகத்தின் ஆலோசனையை ஏற்கும் மனநிலையில் இஷான் கிஷன் இல்லை.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தயாரில்லை என்று இஷான் கிஷன் மறுத்துள்ளார். அதன்பின்னரே துருவ் ஜுரெலை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் விளையாட தயாரில்லை என்று கூறிவிட்டு, ஹர்திக் பாண்டியாவுடன் இஷான் கிஷன் பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.