மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கால் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தொடரிலிருந்து விலகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பண்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக, அதிரடி வீரர் இஷான் கிஷன் அணிக்குத் திரும்ப அழைக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இஷான் கிஷன் இந்திய அணி நிர்வாகத்துக்கு எதிராக நடந்து கொண்டதாக ஓராண்டுக்கு முன் சர்ச்சை எழுந்து இருந்தது. அதனால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்ட நிலையால் இஷான் கிஷன் இந்திய டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராக இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றபோது, பந்து அவரது வலது கால் விரல்களை பலமாகத் தாக்கியது. வலியால் துடித்த அவரை, மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
பரிசோதனையில், பண்ட்டின் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர் சுமார் ஆறு வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இந்தப் போட்டியில் அவர் மீண்டும் பேட்டிங் செய்வது சந்தேகமே என்றும், ஜூலை 31 அன்று ஓவல் மைதானத்தில் தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
ரிஷப் பண்ட் விலகும் பட்சத்தில், அவருக்கு மாற்று வீரராக இஷான் கிஷனை அணியில் சேர்க்க தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. துருவ் ஜுரல் ஏற்கனவே மாற்று விக்கெட் கீப்பராக அணியில் இருந்தாலும், இஷான் கிஷனின் சமீபத்திய இங்கிலாந்து அனுபவம் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
சமீபத்தில், இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன், இரண்டு அரை சதங்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது இங்கிலாந்து சூழலுக்கு அவர் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. இதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் வாய்ப்பு பெறுவார் என கூறப்படுகிறது.
2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் இஷான் கிஷன். அந்தத் தொடரில் ஒரு அரை சதமும் அடித்திருந்தார். பின்னர், மனநலச் சோர்வைக் காரணம் காட்டி கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுத்தார். இதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடாததால், பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். தற்போது இந்த வாய்ப்பு அவருக்கு மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய ஒரு கதவைத் திறந்துவிட்டுள்ளது.
இந்திய அணி ஏற்கனவே காயங்களால் தவித்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி ஆகியோர் காயங்களால் அவதிப்பட்டு வரும் நிலையில், ரிஷப் பண்ட்டின் விலகல் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
ரிஷப் பண்ட் இல்லாதது இந்திய அணிக்கு பேட்டிங்கில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. இந்தத் தொடரில் இதுவரை 462 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரது அதிரடியான ஆட்டம், போட்டியின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டது. தற்போது பண்ட் விலகியுள்ளதால், ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி புதிய வியூகங்களுடன் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.