பிர்மிங்காம்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்வதற்காக இங்கிலாந்து அணி ஆடி வந்த நிலையில், அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் சம்பந்தமே இல்லாமல் அதிரடி ஆட்டம் ஆடினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அதிக ரன்கள் சேர்த்தபோதும், தேவையே இல்லாமல் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை அடித்து மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்க நினைத்து தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அவர் இங்கிலாந்து அணியிலேயே அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார் என சிலர் பாராட்டி வந்தாலும், போட்டியின் சூழ்நிலை பற்றிய சிந்தனையே இல்லாமல் அதிரடியாக ஆட நினைத்து தனது விக்கெட்டைப் பறிகொடுத்துவிட்டார். அவர் நினைத்திருந்தால் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியை டிரா செய்திருக்கும் என பல விமர்சகர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 587 ரன்களையும், இங்கிலாந்து அணி 407 ரன்களையும் எடுத்திருந்தன. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
நான்காம் நாள் இறுதியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சற்று அதிரடியாகவே ஆடியது. ஆனால், மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாவது நாள் அன்று 7 விக்கெட் கையிருப்புடன் 536 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலை இருந்தது. அத்தனை பெரிய இலக்கை எட்டுவது என்பது சாத்தியமில்லாதது என்பதால், இங்கிலாந்து அணி டிரா செய்ய முயற்சிக்கும் என அந்த அணியின் துணை பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோத்திக் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஜேமி ஸ்மித் அதிரடியாக ஆடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடினர். அதனால் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. ஜேமி ஸ்மித் முதலில் நிதானமாக ஆடினாலும், விக்கெட்டுகள் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருந்த நிலையில் அவர் அதிரடியாக ஆடினார். அது ஏன் என்று யாருக்கும் புரியவில்லை.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 40 ஓவர்களை சமாளித்துவிட்டால், இந்தப் போட்டியை டிரா செய்யலாம் என்ற நிலை இருந்தது. அப்போது ஒரு ஓவருக்கு எட்டு ரன்களுக்கு மேல் எடுத்தால்தான் இங்கிலாந்து அணி வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையும் இருந்தது. மேலும், இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து இருந்தது.
இந்த சூழ்நிலையில் வெற்றி பெறுவது என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. அதனால் ஆடுகளத்தில் இருந்த ஒரே பேட்ஸ்மேனான ஜேமி ஸ்மித், பின்வரிசை வீரர்களுடன் நிதானமாக ஆடுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் ஜேமி ஸ்மித் அப்போதுதான் சிக்ஸர் அடிப்பதில் ஆர்வமாக இருந்தார்.
அதிலும் குறிப்பாக, இந்தப் போட்டியில் அதுவரை மொத்தம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஆகாஷ் தீப் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளை சிக்ஸருக்கு விரட்டினார் ஜேமி ஸ்மித். அதைத் தொடர்ந்து வீசிய பந்து மெதுவாக வந்தது. ஆனால், ஜேமி ஸ்மித் முந்தைய இரண்டு பந்துகளைப் போலவே நினைத்து அந்த பந்தை ஆட முயற்சித்து கேட்ச் கொடுத்தார்.
ஜேமி ஸ்மித் 99 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிரா செய்ய வேண்டிய போட்டியில் இப்படி ஆட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. ஒருவேளை அவர் நிதானமாக ஆடியிருந்தால், இங்கிலாந்து அணி இன்னும் பல ஓவர்களை சமாளித்து டிராவை நோக்கி சென்று இருக்க முடியும்.