மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய அணி ஒரு போட்டியில் தான் வென்றுள்ளது. இதனால் இந்தியா நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்த சூழலில் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.

அபாரமாக பத்து வீசி 5 விக்கெட் எடுக்க இந்திய அணி 358 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் 61 ரன்களும், ரிஷப் பன்ட், ஜெய்ஸ்வால் ஆகியோர் அரைசதமும் எடுத்தனர். இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் அதிரடி காட்டியது.
225 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடங்கியது. ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினர். ஆலி போப் 71 ரன்கள் எடுக்க, சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தனது 38வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய அவர் 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் டிராவிட், காலில் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரை பின்னுக்கு தள்ளி தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.
சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார். சச்சினுக்கும், ஜோ ரூட்டுக்கும் இடையே 2512 ரன்கள் வித்தியாசம் இருக்கின்றது. இதனிடையே ஹாரி புரூக் 3 ரன்களிலும், ஜெமிஸ்மித் ஒன்பது ரன்களிலும் ஆட்டம் இழக்க இந்திய அணி மீண்டும் போட்டிக்குள் வந்தது. இந்த தருணத்தில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டோக்ஸ் பேட்டிங்களும் தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியாவிற்கு எதிராக கடந்த சில போட்டிகளாக தடுமாறிய ஸ்டோக்ஸ் தற்போது அரை சதம் கடந்து விளையாடி வந்தார். 66 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்துவீச்சில் காயம் அடைந்த ஸ்டோக்ஸ் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். எனினும் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து வந்ததால் மீண்டும் களத்திற்கு வந்து பேட்டிங் செய்து வருகிறார். தற்போது மூன்றாவது நாள் ஆட்டநேரம் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்போது ஸ்டோக்ஸ் 77 ரன்களுடனும் லியான் டாசன் 21 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர். இது இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 186 ரன்கள் கூடுதலாகும்.