ராஜ்கோட் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ். இங்கிலாந்து அணிக்காக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பேர்ஸ்டோவ் 12 சதங்கள், 26 அரைசதங்கள் உட்பட 5,902 ரன்களை விளாசியுள்ளார். அதிலும் பேஸ் பால் அணுகுமுறைக்கு இங்கிலாந்து அணி மாற்றிய பின், பேர்ஸ்டோவின் ஆட்டம் உச்சத்திற்கு சென்றது. இங்கிலாந்து மண்ணில் மிகவும் அபாயகர வீரர்களில் பேர்ஸ்டோவும் ஒருவர்.

இந்த நிலையில் ஆசிய மண்ணில் ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங் நாளுக்கு நாள் பரிதாப நிலைக்கு இறங்கி வருகிறது. இந்திய அணிக்கு எதிராக இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் வெறும் 98 ரன்களை மட்டுமே பேர்ஸ்டோவ் சேர்த்துள்ளார். அதிலும் 3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய நாளில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் டக் அவுட்டாகி வெளியேறினார்.
குல்தீப் யாதவ் வீசிய பந்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் பேர்ஸ்டோவ் தடுமாறியது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஸ்பின்னர்களின் கைகளை கவனிக்காமல் அவர்களுக்கு எதிராக சிறந்த பேட்டிங் செய்ய முடியாது என்பது பேர்ஸ்டோவின் ஆட்டத்தின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பேர்ஸ்டோவ் டக் அவுட்டானதன் மூலமாக மோசமான சாதனையை படைத்துள்ளார். இதுவரை இந்திய அணிக்கு எதிரான அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா 7 டக் அவுட்டுடன் முதலிடத்தில் இருந்தார். அவரின் சாதனையை பேர்ஸ்டோவ் முறியடித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்தின் டக் அவுட்டானதன் மூலமாக 8வது முறையாக இந்திய அணிக்கு எதிராக பேர்ஸ்டோவ் டக் அவுட்டாகியுள்ளார். இந்த பட்டியலில் பேர்ஸ்டோவ் முதலிடத்திலும், கனேரியா மற்றும் லயன் ஆகியோர் 2வது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷேன் வார்னே மற்றும் தில்லன் ஆகியோர் 6 முறை டக் அவுட்டாகி 3வது இடத்திலும் உள்ளனர். பேஸ் பால் அணுகுமுறைக்கு பின் பேர்ஸ்டோவ் ஃபிளாட் பிட்ச்களில் மட்டுமே ரன்கள் சேர்ப்பது குறிப்பிடத்தக்கது.