புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் சிவம் துபே பேட்டிங் செய்து அரை சதம் அடித்த பின் மூளை அழற்சி (Concussion) காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டார். இது விதிகளுக்கு புறம்பானது என சர்ச்சை எழுந்தது.
இது பற்றி இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் போட்டி முடிந்தவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிப்படையாக பேசினார். இந்த விவகாரம் குறித்தும், ஜோஸ் பட்லர் என்ன கூறினார்? என்பதையும் பார்க்கலாம்.
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அணியில் நீண்ட காலத்துக்கு பின் சேர்க்கப்பட்ட சிவம் துபே பொறுப்பாக விளையாடி 34 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரின் போது அவரது ஹெல்மெட்டில் பவுன்சர் பந்து தாக்கியது. இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

அப்போது சிவம் துபே ஆடுகளத்துக்கு வரவில்லை. பந்து தாக்கியதால் அவருக்கு மூளை அழற்சி ஏற்பட்டு இருப்பதாக கூறி விதிகளின் படி அவரை நீக்கிவிட்டு மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை சேர்த்தது இந்திய அணி நிர்வாகம். பொதுவாக இது போன்ற மாற்றத்தின் போது நீக்கப்பட்ட வீரருக்கு இணையான வீரரை தான் அணியில் சேர்க்க முடியும்.
ஆனால், பவுலிங்கில் மிகவும் சராசரியாக செயல்படக்கூடிய சிவம் துபேவுக்கு மாற்றாக அதிக வேகத்தில் பவுலிங் செய்யும் ஹர்ஷித் ராணாவை அணியில் சேர்த்தது எப்படி சாத்தியம்? என அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார் கேப்டன் ஜோஸ் பட்லர். மேட்ச் ரெஃப்ரீ ஜவகல் ஸ்ரீநாத் இந்த மாற்றத்தை ஒப்புக்கொண்டார் என அவருக்கு பதில் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் இது பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஜோஸ் பட்லர், "இணையான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஒன்று சிவம் துபே மேலும் 25 மைல் வேகத்தில் பந்து வீச வேண்டும் அல்லது ஹர்ஷித் ராணா தனது பேட்டிங் திறனை நன்கு முன்னேற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இது ஒரே மாதிரியான வீரர்களை மாற்றியதாக கருத முடியும்."
"எனினும், இது போன்ற விஷயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதி தான். எப்படி இருந்தாலும் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நான் நினைத்தேன். அதே சமயம் இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை. என்னிடம் யாரும் இதைப்பற்றி ஆலோசிக்கவில்லை. நான் பேட்டிங் செய்ய வந்த போது ஹர்ஷித் ராணா யாருக்கு பதிலாக இங்கே இருக்கிறார் என்று தான் நினைத்தேன்."
"அதன் பின் ராணா மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றார்கள். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. அது இணையான மாற்று வீரர் தேர்வு இல்லை. மேட்ச் ரெஃப்ரீ இந்த முடிவை எடுத்ததாக அம்பயர்கள் என்னிடம் கூறினார்கள். எனவே, இந்த விஷயத்தில் மறுப்பு சொல்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது."
"நாங்கள் நிச்சயம் மேட்ச் ரெஃப்ரீ ஜவகல் ஸ்ரீநாத்திடம் சில கேள்விகளை கேட்போம். இந்த விஷயத்தில் மேலும் அதிக தெளிவை பெற முயற்சிப்போம்." என்றார் ஜோஸ் பட்லர். இந்த விதி ஐபிஎல் இம்பேக்ட் வீரர் விதியை போல இருப்பதாக ரசிகர்கள் பேசி வந்த நிலையில், அது பற்றி பதில் அளித்த ஜோஸ் பட்லர், "அடுத்த போட்டியின் போது நாங்களும் 12 வீரர்களை அறிவிப்போம்." என்று கூறினார். இதன் மூலம் இந்திய அணி செய்த விஷயத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.