எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இருந்து சாய் சுதர்சன் அதிரடியாக நீக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதில் முதல் டெஸ்டில் ஆறாவது வீரராக நடுவரிசையில் களம் இறங்கிய கருண் நாயர் மூன்றாவது இடத்தில் விளையாடினார்.
நடுவரிசையில் கருண் நாயர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கருண் நாயர் பெரிய இன்னிங்ஸை விளையாடுவார் என்ற ஒரே காரணத்திற்காக தான் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

பொதுவாக மூன்றாவது விதமாக களமிறங்கும் பேட்ஸ்மேன் அதிக பந்துகளை எதிர் கொண்டு பந்தை பழையதாக முயற்சி செய்ய வேண்டும். முதல் டெஸ்டில் முதலில் சாய் சுதர்சன் டக்அவுட் ஆனாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய அறிமுக போட்டியிலே 48 பந்துகளை அவர் எதிர்கொண்டு 30 ரன்களை இரண்டாவது இன்னிங்ஸில் சேர்த்தார்.
இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும். சாய் சுதர்சன் ஸ்ட்ரைக் ரேட் 68 என்ற அளவில் இரண்டாவது இன்னிங்சில் இருந்தது. இதனால் சாய் சுதர்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அது அவருடைய நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கும். ஆனால் தேவை இல்லாமல் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு கருண் நாயர் விளையாடினார்.
கருண் நாயர் தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 31 ரன்கள் சேர்த்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 62 ஆகும். கிட்டத்தட்ட சாய் சுதர்சன் விளையாடிய அதே ஆட்டத்தை தான் கருண் நாயரும் விளையாடி இருக்கிறார். இந்த இரண்டையும் குறிப்பிட்டு இதற்கு பருத்திமூட்ட குடோனில் இருந்திருக்கலாமே என்ற வசனத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் கருண் நாயரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை அவர் இரண்டு முறை தான் 26 ரன்களை தாண்டி இருக்கின்றார். அதில் முதல் முறை அவர் 26 ரன்களை தாண்டிய போது முச்சதம் அடித்திருந்தார். இந்த சூழலில் இரண்டாவது முறையாக அவர் 26 ரன்களை தாண்டியதால் இன்று கருண் நாயர் முச்சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 31 ரன்களில் பெவிலியன் திரும்பிருக்கிறார். இப்படி கருண் நாயர் பெரிய அளவு டெஸ்ட் போட்டிகளில் சாதிக்காத நிலையில் அவருக்காக சாய் சுதர்சன் நீக்கப்பட்டு இருப்பது தவறான முடிவு என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.