மும்பை: 2024 - 25 விஜய் ஹசாரே டிராபி என்ற தேசிய அளவிலான ஒரு நாள் தொடரில் கருண் நாயர் அபாரமாக ஆடி 8 இன்னிங்ஸ்களில் 779 ரன்கள் சேர்த்தார். அவரது பேட்டிங் சராசரி 389.50 என்பதாக இருந்தது. 2017 ஆம் ஆண்டு அவர் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.
அதன் பின் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தன்னை நிரூபிக்கும் வகையில் இந்த அற்புதமான ஆட்டத்தை ஆடி இருந்தார். அவர் 8 இன்னிங்ஸ்களில் ஐந்து சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்து இருந்தார். இந்த ஆட்டத்தால் அவருக்கு இந்திய ஒரு நாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கருண் நாயருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. இது ஏன் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விளக்கம் அளித்து இருக்கிறார். இந்திய அணியில் இருக்கும் பேட்டிங் வரிசையில் கருண் நாயரை எங்கு ஆட வைப்பது என்ற குழப்பம் இருந்ததாலேயே அவரை அணியில் தேர்வு செய்யவில்லை என சுனில் கவாஸ்கர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
"எங்கே கருண் நாயரை ஆட வைப்பீர்கள்? அவரை அணியில் சேர்த்தால் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது கே எல் ராகுலை நீக்க வேண்டி வரும். கே எல் ராகுல் இரண்டாவது விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2023 உலக கோப்பையில் அவரது ஆட்டம் நன்றாக இருந்தது. அதன் பின் இந்திய அணி அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை."
"ஸ்ரேயாஸ் ஐயரும் ஒரு நாள் போட்டிகளில் இதுவரை சிறப்பாகவே ஆடி இருக்கிறார். அதனால் தான் கருண் நாயர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவர் இதே போன்ற பேட்டிங் செயல்பாட்டை அடுத்து நடைபெற உள்ள ரஞ்சி டிராபிக் தொடரிலும் வெளிப்படுத்தினால் அடுத்த நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவரை சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்." என்று சுனில் கவாஸ்கர் விளக்கம் அளித்து இருக்கிறார்.