லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பிடித்திருக்கும் கருண் நாயர், தனது இடம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார். இதற்கிடையே, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் கடுமையாகப் பயிற்சி செய்திருக்கிறார். நேற்று நடந்த வலைப் பயிற்சி கட்டாயமானது அல்ல; விருப்பப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என இந்திய அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த வலைப் பயிற்சியில் பங்கேற்கவில்லை. ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோரும் பயிற்சி செய்யவில்லை. இந்த நிலையில் தான், கருண் நாயர் இந்த வலைப் பயிற்சியில் நீண்ட நேரம் பேட்டிங் செய்த தகவல் வெளியாகி உள்ளது. அவர் வலைப் பயிற்சியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழற்பந்துவீச்சை நீண்ட நேரம் சந்தித்து விளையாடினார்.

தற்போது டெஸ்ட் அணியில் கருண் நாயரின் இடத்துக்கு சாய் சுதர்சன் காத்துக் கொண்டிருக்கிறார். கருண் நாயர் அணியிலிருந்து நீக்கப்பட்டால், உடனடியாக சாய் சுதர்சன் அவருக்குப் பதிலாக மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்வார். எனவே, இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே தான் கருண் நாயர் தீவிர பயிற்சி செய்திருக்கிறார்.
அவர் இதுவரை இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் விளையாடி, நான்கு இன்னிங்ஸ்களில் 77 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி இதில் 19.25 என்பதாக மோசமாக உள்ளது. அவர் 154 பந்துகளைச் சந்தித்து இருந்தார். அந்த நான்கு முறையும் அவர் கேட்ச் கொடுத்து தான் ஆட்டமிழந்தார். எனவே, அவர் தனது பேட்டிங்கை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
சாய் சுதர்சன் முதல் போட்டியில் விளையாடியிருந்தார். அதில் அவர் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும், அவர் இளம் வீரர் என்பதோடு இதுவரை ஒரே ஒரு போட்டியில் தான் ஆடி இருக்கிறார் என்ற அடிப்படையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அவருக்கு இந்த டெஸ்ட் தொடரில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது போட்டியில் கருண் நாயருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது சாய் சுதர்சனுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அணியின் தேர்வு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.