மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது. இந்த போட்டியில் களத்தில் பல மோதல்களும் வாக்குவாதங்களும் நடந்தது.
இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய எதிரிகளாக இந்தியாவும் இங்கிலாந்து மாறிவிட்டதாக ரசிகர்கள் கருதினர்.லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வேண்டுமென்றே தாமதமாக பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து வீரர்களை கில் கடுமையாக சாடினார்.

இதனை தொடர்ந்து பல்வேறு காரசார விவாதங்களும் நடந்தது.இந்த தருணத்தில் களத்தில் நாங்கள் மோதி கொண்டாலும் களத்திற்கு வெளியே நாங்கள் நண்பர்கள்தான் என்பதை இரு அணி வீரர்களும் காண்பித்துள்ளனர்.
இது குறித்து இந்திய அணியின் அனுபவ வீரர் கருண் நாயர் அளித்துள்ள பேட்டியில், டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றவுடன் பெரிய அளவில் நாங்கள் எதுவும் கொண்டாடவில்லை.
அதன் பின் நாங்கள் இங்கிலாந்து அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றோம். அப்போது அங்குள்ள வீரர்களுடன் நாங்கள் கட்டி அணைத்து கலந்து உரையாடினோம். அதன்பின் இரு அணிகளும் தங்களுடைய மரியாதையை பகிர்ந்து கொண்டோம். அதன் பின் பயிற்சியாளர் மெக்குல்லிமை சந்தித்து நாங்கள் பேசினோம்.அப்போது மெக்குல்லம் தான் இடம் பெற்றதில் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான் என்று பாராட்டினார்.
ஒரு வீரராக நாங்கள் எவ்வளவு சிறப்பாக விளையாடினோம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது தொடர் முடிவடைந்த பின் பின்னோக்கிப் பார்த்தால் நாங்கள் ஏதோ சிறப்பான ஒரு விஷயத்தை சாதித்து இருக்கின்றோம் என்று மட்டும் புரிகிறது என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கருண் நாயர் திரும்பியிருந்தார். எனினும் இந்த தொடரில் கருண் நாயர், ஒரே ஒரு அரை சதம் மட்டும் தான் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.