லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2016 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் விளாசி சாதனை படைத்தார். ஆனால் அதன் பிறகு கருண் நாயர், பெரிய அளவு சாதிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் காயம் காரணமாக போதிய வாய்ப்புகள் இல்லாமல் அணியின் தனது இடத்தை இழந்தார்.
இதன் பிறகு கடுமையான போராட்டம் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நூற்றுக்கணக்கான ரன்கள் என பட்டையை கிளப்பினார். இதேபோன்று கவுண்டி கிரிக்கெட்டிலும் கருண் நாயர் சதம் சதமாக அடித்தார்.

வாய்ப்பு கிடைக்காததால் கருண் நாயர், டியர் கிரிக்கெட் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கு என்று உருக்கமாக கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
இங்கிலாந்து மண்ணில் அவர் சாதிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்ற வகையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கருண் நாயர் இரட்டை சதம் அடித்தார். இதேபோல் ஒரு ஃபார்மை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 0, 20, 31, 26, 40 ஆகிய ரன்களை மட்டும் தான் எடுத்திருந்தார்.
இந்த நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணிக்கப்பட்டு இருந்தது. அப்போது இந்திய அணி ஐந்து ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நிலையில், கருண் நாயருக்கு தன் வாழ்நாளில் சிறந்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதில் மற்றும் அவர் சிறப்பாக பயன்படுத்தி சதம் அடித்திருந்தால் அவர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பார்.
ஆனால் கருண் நாயர் வழக்கம் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். இதனால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். கிரிக்கெட்டிடம் வாய்ப்பு கேட்டு கெஞ்சிய கருண் நாயர் அந்த வாய்ப்பு கிடைத்தும், அதை குப்பையில் தூக்கி போடுவது போல் விளையாடுகிறார் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி கிரிக்கெட் கொடுத்த தங்கமான வாய்ப்பை வீணடிப்பதால் இனி கருண் நாயருக்கு இந்திய அணியில் வாய்ப்பே கொடுக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு பதில் தமிழக வீரர் சாய் சுதர்சனையாவது அணியில் சேர்த்து இருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.