லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்திய அணிக்குத் திரும்பிய கருண் நாயருக்கு வலைப்பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. இது சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது. நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கும் கருண் நாயர், 2017 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து முச்சதம் அடித்தார்.
அதன் பிறகு சில போட்டிகளை மட்டுமே ஆடி, சுமார் எட்டு ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வந்தார். தற்போது உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்து மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றிருக்கும் நிலையில், அவர் மீண்டும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

வலைப்பயிற்சியில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து கருண் நாயரை தாக்கியது. உடனடியாக அவர் பேட்டிங் செய்வதை நிறுத்தினார். இந்திய அணியின் மருத்துவக் குழுவினர் ஓடி வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். அதன் பிறகு எதுவும் பெரிதாக ஆகவில்லை எனத் தகவல் சொல்லப்பட்டதால், இந்த விவகாரம் குறித்து அறிந்த ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.
2023 மற்றும் 2024 ரஞ்சி டிராபி தொடரில் தலா 800 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார் கருண் நாயர். அதைத் தொடர்ந்து, ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் 5 சதங்களை வரிசையாக அடித்து மிரட்டி இருந்தார். சமீபத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்தார். இதை அடுத்தே அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது 33 வயதாகும் கருண் நாயர், இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே விளையாட முடியும் என்ற நிலையில் இருக்கிறார். ஆனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி சில சதங்களை அடித்தால், நீண்ட காலத்திற்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவர் மூன்றாவது வரிசையில் விளையாடுவாரா அல்லது மிடில் ஆர்டரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.