லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பிடித்த கருண் நாயர், பயிற்சிப் போட்டியில் இந்தியா 'ஏ' அணியில் இடம் பிடித்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் அதிரடியாக ஆடி 180 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்து மிரட்டினார். இதை அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனிலும் அவருக்கு இடம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக இந்தியா 'ஏ' அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 2 பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளில் முதல் பயிற்சிப் போட்டி இன்று (மே 30, 2025) துவங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 55 பந்துகளைச் சந்தித்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் இந்தப் போட்டியில் வெறும் எட்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவர் துவக்க வீரராக ரோகித் சர்மாவுக்குப் பதிலாக இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், அவர் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து மூன்றாம் வரிசையில் இறங்கிய கருண் நாயர் அபாரமாக ஆடினார். சர்பராஸ் கான் உடன் இணைந்து அவர் மூன்றாவது விக்கெட்டுக்கு 181 ரன்கள் கூட்டணி அமைத்தார். சர்பராஸ் கான் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்; எட்டு ரன்களில் தனது சதத்தைத் தவறவிட்டார்.
மறுபுறம் கருண் நாயர் விளையாடி சதம் அடித்தார். அதன் பின்னரும் தனது ரன் குவிப்பைத் தொடர்ந்த அவர் 180 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்து மிரட்டினார். துருவ் ஜுரெலும் அதிரடியாக விளையாடினார்; அவர் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். இந்தியா 'ஏ' அணி விரைவாகவே 400 ரன்களை எட்டியது.
கருண் நாயரின் அற்புதமான ஆட்டத்தால், அவர் இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், மூன்றாம் வரிசை மற்றும் நான்காம் வரிசையில் யாரை ஆட வைப்பது என்ற குழப்பம் இருக்கிறது. இந்த நேரத்தில் கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், அவர் நிச்சயமாக மூன்றாம் வரிசை அல்லது நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.