அகமதாபாத்: ரவி சாஸ்திரி மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடருக்கு முன்பு பயிற்சி செய்யாதது பற்றி விமர்சித்துப் பேசியிருந்தனர். இதற்கு சப்பைக்கட்டு கட்டும் வகையில் பிரிட்டன் நாட்டு ஊடகம் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் கட்டுரை எழுதி இருந்தார். அது குறித்து கெவின் பீட்டர்சன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாடியது. டி20 தொடரில் 4-1 என தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரில் 3-0 என தோல்வி அடைந்தது.

இந்த மோசமான தோல்வியை அடுத்து ரவி சாஸ்திரி மற்றும் கெவின் பீட்டர்சன் விமர்சனம் ஒன்றை முன்வைத்து இருந்தனர். இந்த ஒட்டுமொத்த தொடரிலும் இங்கிலாந்து அணி ஒரே ஒரு முறை மட்டுமே வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. இதை மட்டும் செய்தால் நீங்கள் எப்படி முன்னேறுவீர்கள்? சுழற்பந்து வீச்சுக்கு எதிராக முன்னேற வேண்டும் என்றால் வலை பயிற்சி செய்ய வேண்டும். அதை செய்யாமல் இருந்தால் எப்படி நீங்கள் முன்னேறுவீர்கள்? என்ற விமர்சனத்தை முன்வைத்து இருந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரிட்டன் நாட்டு ஊடகம் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அதில் டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடர்களுக்கு இடையே அதிக இடைவெளி இல்லை என்றும், தொடர்ந்து போட்டிகள் இருக்கும் நிலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டால் அதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படலாம் என்ற காரணத்தால் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால் பிப்ரவரி 2ஆம் தேதி டி20 தொடரின் கடைசி போட்டி நடந்தது. பிப்ரவரி 6ஆம் தேதி ஒரு நாள் தொடர் துவங்கியது. இடையே மூன்று நாட்கள் இருந்தன. அதை சுட்டிக்காட்டி இருக்கும் கெவின் பீட்டர்சன், "நேற்று இரவு நானும் ரவி சாஸ்திரியும் இங்கிலாந்து அணி பயிற்சி செய்யவில்லை என்பதைப் பற்றி விவாதித்தோம். அது பற்றி ஒரு முன்னணி பத்திரிகையாளர் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருக்கும் காரணம் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற்றது மற்றும் காயங்கள் எனக் கூறி இருக்கிறார்."
"எனக்காக ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள், இது போன்ற குப்பையான விஷயங்களை எழுத போகிறீர்கள் என்றால் நீங்கள் இத்துடன் கிரிக்கெட்டைப் பற்றி எழுதுவதை நிறுத்தி விடுங்கள். காயங்கள் இந்த விளையாட்டின் ஒரு பகுதி. வேறு எந்த இருதரப்பு தொடருடன் ஒப்பிட்டாலும் அதே போன்ற அட்டவணை தான் இங்கேயும் அமைக்கப்பட்டு இருந்தது."
"காயங்கள், ஒரு பேட்ஸ்மேனை வலைப்பயிற்சியில் சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் இருந்து தடுத்து நிறுத்தாது. அப்படித்தான் அவர்கள் சுழற் பந்துவீச்சில் தங்களை முன்னேற்றிக் கொள்ள முடியும். இதுதான் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் நன்றாக விளையாட உதவியது. சில பத்திரிக்கையாளர்கள் ஏதோ ஒரு விஷயத்தை வைத்து மூளை சலவை செய்ய நினைக்கிறார்கள். ரசிகர்களை இதுபோல முட்டாள் ஆக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.