சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கே எல் ராகுல் சதம் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் அடித்த ஆசியாவின் தொடக்க வீரர் என்ற பெயரை ராகுல் பெற்றார்.ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா, ரஹானே போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் ராகுல் மட்டும்தான் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கின்றார்.
இதனால் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற வேண்டுமென்றால் ராகுலின் ஆட்டம் மிகவும் முக்கியமாகும். இந்த தருணத்தில் தான் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் ராகுல் இங்கிலாந்துக்கு சென்று இந்திய ஏ அணியில் இடம்பெற்று பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றார். இது குறித்து பாராட்டியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமாங் பதானி, "இங்கிலாந்து நாட்டுக்கு நான் மெயின் தொடருக்கு முன்பே செல்ல விரும்புகின்றேன்."

" அங்கு சென்று இந்திய ஏ அணியில் இடம்பெற்று விளையாடப் போகிறேன் என்று ராகுல் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் அடித்த சதத்தை மறந்து விடுங்கள். ஆனால் களத்தில் அவர் ஆடிய விதம் தான் முக்கியம். ஆட்டம் இழக்காமல் அதிக பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் அடிப்பேன் என்ற உத்வேகத்துடன் அவர் விளையாடினார்."
"இந்த தொடருக்காக அவர் நல்ல முறையில் பயிற்சி செய்திருக்கின்றார். ராகுலுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்தது என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை என்பதால், இங்கிலாந்துக்கு குழந்தையுடன் ராகுல் செல்ல வாய்ப்பு இல்லை."
"இந்த சூழ்நிலையில் நான் எனது குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க விரும்புகின்றேன். நான் எந்த ஒரு பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்க போவதில்லை என்று ராகுல் நினைத்து இருந்தால் சொல்லி இருக்கலாம்.அவர் நேரடியாக டெஸ்ட் தொடரில் விளையாட சென்றிருக்கலாம். அவர் அப்படி செய்திருந்தால் யாரும் எதுவும் சொல்லிருக்க மாட்டார்கள்."
"ஆனால் ராகுலும் எனக்கு குழந்தையை விட நாடுதான் முக்கியம் என்ற முடிவை எடுத்திருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்டலாம்.ராகுல் கண்ணில் சாதிக்க வேண்டும் என்ற பசி இருக்கின்றது. கோலி, ரோஹித் இல்லாத நிலையில் இவர்தான் அனுபவ் வீரர். தற்போது ராகுல் நல்ல பார்ம் உடன் இருக்கின்றார். இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை அவர் நிரப்புவார். மேலும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் ராகுவும் நிச்சயம் இருப்பார்" என்று கூறியுள்ளார்.