லண்டன்: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகிய நிலையில், இந்திய அணியின் மூத்த வீரராக இருக்கும் கே.எல். ராகுல் இனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும், கேப்டன் சுப்மன் கில்லை விட இந்திய அணியில் அதிக முக்கியத்துவம் பெறுவார் என்றும் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஓவைஸ் ஷா கூறி உள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராகப் ஆடி வரும் கே எல் ராகுல், ஆறு இன்னிங்ஸ்களில் 62.50 சராசரியுடன் 375 ரன்கள் குவித்து இருக்கிறார். இரண்டு சதங்களுடன் பேட்டிங்கில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் பேட்டிங் வரிசையில் நீண்ட காலத்துக்கு பிறகு தனது விருப்ப இடமான துவக்க வீரர் என்ற இடத்தை பெற்ற ராகுல், இதுவரை சிறப்பாக ஆடி துவக்க வீரராக தன்னை நிரூபித்துள்ளார். கோலி களத்தில் இருக்கும்போது ராகுல் பெரும்பாலும் பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் விளையாடினார்.
ஆனால் இப்போது இந்திய அணியின் முதன்மை வீரராக ராகுல் உருவெடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது சிறப்பான ஃபார்மில் உள்ள கேப்டன் சுப்மன் கில்லை விடவும் ராகுல் முக்கியத்துவம் பெறுவார் என்று ஓவைஸ் ஷா கூறி உள்ளார்.
"கே எல் ராகுல் இதற்கு முன் விராட் கோலியின் நிழலில் இருந்தார் என்று நான் நினைக்கிறேன். கோலி களத்தில் இருக்கும்போது, அவர் எப்போதும் முக்கிய பேட்ஸ்மேனாக இருப்பார். அப்போது ராகுல் கவனத்தை ஈர்க்காமல் இருந்தார். ஆனால் இது அவர் ஜொலிக்கும் நேரம். இது விராட் கோலி இல்லாத முதல் தொடர். பேட்டிங் வரிசையைப் பாருங்கள். சுப்மன் கில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார், நான் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் இதுவரை செய்ததைச் செய்ய அவருக்குள் திறன் உள்ளது என்று நான் நினைக்கவில்லை" என்று ஓவைஸ் ஷா குறிப்பிட்டார்.
"ஆனால் கே.எல். ராகுல் பேட்டிங் வரிசையில் நீங்கள் நம்பக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் உணர்கிறேன். அவரது நுட்பம் மற்றும் மன உறுதிக்கு ஏற்றவாறு அவர் ரன்களைக் குவிக்க வேண்டிய நேரம் இது. 10-15 போட்டிகளில் கே.எல். ராகுல் சுப்மன் கில்லை விட அதிக ரன்கள் எடுக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அடுத்த 12 மாதங்களில் அவர் உண்மையாகவே இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன்" என்று ஓவைஸ் ஷா கூறினார்.
கடைசியாக நடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ராகுல் அடித்த சதம் போட்டியில் மட்டுமல்லாமல், வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்றது. திலீப் வெங்சர்க்கருக்குப் பிறகு லார்ட்ஸ் மைதானத்தின் ஹானர்ஸ் போர்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம்பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ராகுல் பெற்றார். அங்கு இதற்கு முன்பும் ராகுல் சதம் அடித்துள்ளார். ராகுலின் சிறப்பான ஆட்டம் ஒருபக்கம் இருந்தாலும், ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா தற்போது 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.