லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல் சதம் விளாசி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ராகுல் பத்தாவது சதத்தை அடித்து இருக்கின்றார். ராகுல் அடித்த சதங்களில் ஒரே ஒரு சதம் மட்டும் தான் இந்திய மண்ணில் அடிக்கப்பட்டது.
மற்ற ஒன்பது சதங்களும் இந்தியாவுக்கு வெளியில் அடிக்கப்பட்டவை. அதில் இங்கிலாந்தில் மட்டும் தற்போது ராகுல் நான்கு சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 387 ரன்களில் ஆட்டம் இழந்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், கருண் நாயர் 40 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்த சூழலில் 145 ரன்களில் மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது.ராகுல் 53 ரன்களுடனும் ரிஷப் பந்த்19 ரன்கள் உடனும் களத்தில் நின்றனர்.
இந்த ஜோடி அபாரமாக விளையாடி நான்காவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. இந்த சூழலில் பண்ட் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி ரசிகர்களை சோகமடைய செய்தார். எனினும் மறுமுனையில் அபாரமாக விளையாடிய ராகுல் 176 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். ராகுல் தனது சதத்தை பெரிய சதமாக மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த பந்திலே ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் இந்த சதம் மூலம் ராகுல் பல்வேறு சாதனைகளை சமன் செய்திருக்கின்றார். கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் ராகுல் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.
கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் போன்றோர் இரண்டு சதம் அடித்த நிலையில் ராகுலும் தற்போது இரண்டு சதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அடித்துள்ளார்.
இந்த பட்டியலில் திலீப் வெங்சர்கார் 3 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இதேபோன்று சேனா நாடுகளில் அதிக சதம் அடித்த இந்திய தொடக்க வீரர்கள் பட்டியலில் ராகுல் தற்போது ஆறு சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.கவாஸ்கர் 8 சதம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார். இதேபோன்று சேனா நாடுகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் தற்போது ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தத் தொடரில் மட்டும் ராகுல் இரண்டு சதம் ஒரு அரை சதம் அடித்துள்ளார்.