மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுல் தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 511 குவித்திருக்கின்றார். இதில் அவருடைய சராசரி 63 என்று அளவில் இருக்கிறது. இதில் இரண்டு சதமும் அடங்கும்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் கூட ராகுல் 230 பந்துகளை எதிர் கொண்டு 90 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மா இல்லாத நிலையில் ராகுல் தொடக்க வீரராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

இந்த நிலையில் ராகுலின் இந்த பார்மை பாராட்டி அவருக்கு ஒரு முக்கிய வெகுமதி ஒன்றைக் கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் ராகுலை இந்திய அணியில் மீண்டும் சேர்க்க தேர்வு குழு முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
கடைசியாக ராகுல் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் விளையாடினார். ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துவதாக கூறி அவரை டி20 கிரிக்கெட்டில் இருந்து தேர்வு குழுவினர் ஓரம் கட்டினர். தற்போது ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் டி20 கிரிக்கெட்டிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கும் கௌரவப்படுத்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கூட ராகுல் 13 போட்டிகளில் விளையாடி 539 ரன்களை குவித்து இருந்தார். இதில் அவருடைய சராசரி 53 என்ற அளவிலும், ஸ்ட்ரைக் ரேட் 149 என்ற அளவிலும் இருந்தது. ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் கடந்த ஐபிஎல் தொடரில் 136 என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது அது முன்னேறி இருக்கிறது.
இதனால் ராகுல் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கு டி20 கிரிக்கெட் விடும் வாய்ப்பு வழங்கி மூன்று பிரிவுகளிலும் விளையாடும் வீரர் என்ற கௌரவத்தை மீண்டும் வழங்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. வரும் ஆசிய கோப்பை தொடரில் ராகுல் தொடக்க வீரராக அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. சூரியகுமார் யாதவ், புதிய கேப்டன் என்பதால் ராகுல் அவருக்கு நல்ல துணையாக இருப்பார் என்றும் தெரிகிறது.