லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பாரம்பரியமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் தன்னுடைய 37-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதை போன்று ஜெமி ஸ்மித் மற்றும் பிரைடன் கர்ஸ் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி அடித்து அதிரடியாக விளையாடிய நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்தார்.
ஜெய்ஸ்வால் 13 ரன்களில் வெளியேற இரண்டாவது விக்கெடுக்கு கே எல் ராகுல் மற்றும் கருண் நாயர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். ஒரு புறம் கே எல் ராகுல் நங்கூரம் போட்டு நிற்க கருண் நாயர் எளிதான பந்துகளை பவுண்டரிகள் அடித்து ரன்களை சேர்த்தார். 62 பந்துகளை எதிர்கொண்ட அவர் 40 ரன்கள் சேர்த்த நிலையில், கருண் நாயர் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முக்கிய கட்டத்தில் அவரும் ஆட்டம் இழந்தார். இந்த சூழலில் கடந்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய கில், களத்திற்கு வந்தார். அவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் வைத்திருந்தனர். ஆனால் அவர் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே அடித்து 44 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
மறுபுறம் நிதானமாக விளையாடிய கே எல் ராகுல் 113 பந்துகளில் அரை சதம் எடுத்து களத்தில் நிற்கின்றார். தற்போது இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. ராகுல் 53 ரன்களுடனும்,ரிஷப் பண்ட் 19 ரன்கள் உடனும் களத்தில் நிற்கின்றனர். இது இங்கிலாந்து அணியை விட 242 ரன்கள் குறைவாகும். இங்கிலாந்து அணியின் இலக்கை தொட வேண்டும் என்றால் இந்த ஜோடி பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.