லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் சாய் சுதர்சன் விளையாடிக் கொண்டிருந்தபோது இருவரும் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதில் குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்த ராகுல், சாய் சுதர்சனிடம் தமிழில் பேசியது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அண்மையில் தமிழ், கன்னடம் வைத்து மிகப்பெரிய பிரச்சினையை ஏற்பட்டது. நடிகர் கமல்ஹாசன் பேசிய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் தக் லைப் என்ற திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாமல் போனது. இந்த சூழலில் கர்நாடகாவைச் சேர்ந்த ராகுல், மாயக் அகர்வால் போன்ற வீரர்களுக்கு தமிழ் நன்றாக தெரியும். அண்டை மாநிலம் என்பதால் சிறுவயதில் இருந்து மாநில கிரிக்கெட் மண்டல வாரியான கிரிக்கெட்டில் விளையாடிய போது தமிழக வீரர்களுடன் அதிகம் பேசி பழகி இருக்கிறார்கள்.
இதனால் பெங்களூருவை சேர்ந்த வீரர்களுக்கு தமிழ் நன்றாக தெரியும். மேலும் பெங்களூரிலும் குறிப்பிட தகுந்த வகையில் தமிழர்களும் உள்ளனர். இதனால் ராகுலுக்கு தமிழ் என்பது புதிது கிடையாது. எப்போதுமே இந்திய அணியில் வெளிநாட்டு தொடரில் விளையாடும்போது எதிரணி வீரர்களுக்கு புரிய கூடாது என்பதற்காக ஹிந்தியில் பேசிக்கொள்வார்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் போது மட்டும் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் வீரர்கள் பேசிக் கொள்வார்கள்.
ஏனென்றால் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஹிந்தி புரியும் என்பதால் அவர்களுக்கு மட்டும் இந்த யுக்தியை இந்திய வீரர்கள் பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் சாய் சுதர்சன் சென்னையில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு ஹிந்தி பெரிய அளவு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக ராகுல் அவரிடம் தமிழில் பேசினார்.
இங்கிலாந்து சுழற்பந்து வீச வந்தபோது பந்து பவுன்ஸ் ஆனது. இதனை கணித்த ராகுல்," பால் கொஞ்சம் பவுன்ஸ் ஆகுது பாத்துக்கோ" என்று சாய் சுதர்சனிடம் எச்சரிக்கை விடுத்தார். இந்த காட்சி தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.