லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் ஆடுகளத்தில் இல்லாதபோது, மூத்த வீரர் கே.எல். ராகுல் அணியின் கேப்டனாக செயல்பட்டார். நியாயமாகப் பார்த்தால், ரோஹித் சர்மாவுக்கு பிறகு கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால், அவருக்கு கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேலும் அவரது பேட்டிங் வரிசை தொடர்ந்து மாற்றப்பட்டு வந்தது. அதனால் அவரால் டெஸ்ட் போட்டிகளில் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அதன் காரணமாகத்தான் ரோகித் சர்மாவுக்கு பிறகு யாரை டெஸ்ட் கேப்டனாக நியமிக்கலாம் என்ற விவாதம் இருந்தபோது, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில்லின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. கே.எல். ராகுலின் பெயரை ஆலோசிக்க கூட இல்லை. ஆனால், அவர் கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் அவரது செயல்பாடு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் எவ்வாறு தற்காலிகமாக இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்று பார்க்கலாம். இந்தப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 34ஆவது ஓவரின் போது துணை கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. பும்ரா வீசிய பந்தைக் கேட்ச் பிடிக்க பாய்ந்தபோது அவரது விரலில் பந்து தாக்கியது. அதனால் வலியால் துடித்த ரிஷப் பண்ட் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக துருவ் ஜுரல் தற்காலிகமாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.
அதற்கு அடுத்த சில ஓவர்களில் கேப்டன் சுப்மன் கில் சில ஓவர்களுக்கு ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அப்போது மூத்த வீரரான கே.எல். ராகுல் தற்காலிகமாக கேப்டன் பணியை மேற்கொண்டார். பந்துவீச்சு மாற்றம் மற்றும் பீல்டிங் செயல்பாடுகளை ராகுல் கவனித்துக் கொண்டார். சில ஓவர்கள் கழித்து சுப்மன் கில் மீண்டும் ஆடுகளத்திற்கு வந்த பிறகு அவர் கேப்டன் பணியைத் தொடர்ந்தார்.
நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிதானமாக பேட்டிங் செய்து ஆட்ட நேரம் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.